"இது அநியாயம்.." பெங்களூரில் வாடகை வீடு டெபாசிட் தொகையை கேட்டு புலம்பிய வெளிநாட்டு இளைஞர்! ஆமா ரூ.19 லட்சம்னா சும்மாவா
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் வாடைக்கு வீடு எடுக்கும் போராட்டம் குறித்து இணையத்தில் பலரும் புலம்பிக் கேட்டிருப்போம். இதற்கிடையே வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரே கூட பெங்களூரில் வீட்டு வாடகை மற்றும் டெபாசிட் தொகையைக் கேட்டு மிரண்டு போய்விட்டார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் புலம்பித் தள்ளி இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பெங்களூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது. பெங்களூரில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் இது குறித்துக் கேட்டால் அவர்கள் சொல்லும் கதையே தலை சுற்றுவதாக இருக்கும். இணையத்திலும் கூட நெட்டிசன்கள் தாங்கள் வாடகைக்கு எடுத்த கதையைப் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.

கனடா இளைஞர்
இதற்கிடையே இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர், பெங்களூரின் வாடகை மற்றும் டெபாசிட் குறித்து ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். இதைப் படித்தால் நிச்சயம் நமக்கே தலை சுற்றிவிடும். ஒரு வாடகை வீட்டிற்கு எதற்காக இவ்வளவு பெரிய டெபாசிட் தொகை என்பதே இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வியாக உள்ளது.
காலேப் ஃப்ரீசன் என்பவர் இது தொடர்பாகத் தனது அனுபவத்தை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். பெங்களூரில் டொம்லூர் பகுதியில் உள்ள டைமண்ட் டிஸ்ட்ரிக்ட்டில் 3 BHK அபார்ட்மெண்ட் வாடகைக்கு விடப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீட்டின் வாடகை மாதம் ரூ.1.75 லட்சம். ஆனால், அதை விட அதிர்ச்சி அதன் செக்யூரிட்டி டெபாசிட். ஆம், அந்த வீட்டிற்கு டெபாசிட் கட்டணம் ரூ.19.25 லட்சமாம். இதைப் பார்த்த காலேப் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
ரூ.19 லட்சம் டெபாசிட்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ரூ.19 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட்டா! வீட்டு உரிமையாளர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்? இந்த டெபாசிட் தொகையை வைத்து நான் ஒரு புதிய மஹிந்திரா தார் கார் வாங்கிவிடலாம். இந்திராநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2-3 மாத டெபாசிட்டில், ரூ. 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாடகைக்கு வீடு கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரொம்ப அதிகம்
காலேப்பின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இது பெங்களூரின் ரியல் எஸ்டேட் மற்றும் வாடகை குறித்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காலேப்பின் இந்த போஸ்ட்டிற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு பதில்களை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "உங்கள் தேவைக்கு ஏற்ப வீடு கிடைப்பது கடினம். இந்த நகரத்தில் வீடு வாடகைக்கு எடுப்பது ஒரு மாஃபியா மாதிரி" எனக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
புலம்பல்
அதேபோல மற்றொரு நபர், "நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்கு வரலாம் என யோசித்தேன். பெங்களூர் அலுவலகத்தில் நேர்காணலுக்குப் பிறகு, அங்குள்ள வீடுகளைப் பற்றி விசாரித்தேன். எல்லா வீடுகளுக்கும் செக்யூரிட்டி டெபாசிட் எனது சம்பளத்தை விட அதிகமாக இருந்தது. அதனால் பெங்களூருக்கு போகும் எண்ணத்தையே விட்டுவிட்டேன்" என்றார்.
மற்றொரு நபர், "வீட்டு உரிமையாளர்கள் டெபாசிட் தொகையாக ஒரு கிட்னியின் விலையைக் கேட்கிறார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். மற்றொரு நபர், "பெங்களூரில் வீட்டின் வாடகையை விட 10 மடங்கு தொகையை டெபாசிட்டாக கேட்கிறார்கள். அதாவது 21 லட்ச ரூபாய். இது ரொம்ப அதிகம்!" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications