பெங்களுருவில் நிலைமை படுமோசம்.. தடுப்பூசிக்காக அண்டை மாவட்டங்களுக்கு படையெடுக்கும் பெங்களூருவாசிகள்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களுருவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களுருவாசிகள் அண்டை மாநிலத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 39,305 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

பெங்களூரு மோசம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 549 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில தலைநகர் பெங்களுருவில் மட்டும் தினமும் 16,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பெங்களுருவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் என அனைத்தும் நிரம்பி விட்டன.

படுக்கைகள் தட்டுப்பாடு
படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகள் முன்பு பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். யெலஹங்கா அரசு மருத்துவமனையில் படுக்கை கொடுக்காததால் ஜலஜா பிரசாத்(57) என்ற பெண் அந்த மருத்துவமனை முன்பு சுமார் 48 மணி நேரம் காத்திருந்து போராடி படுக்கை பெற்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுதியது.

தடுபூசியும் இல்லை
பெங்களூருவின் அனைத்து மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் உள்ளது. இந்த நிலைமை இப்படி இருக்க பெங்களுருவில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் உள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக பெங்களூரு புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.

படையெடுத்த மக்கள்
பெங்களூரு கிராமப்புற மாவட்டங்களான சிக்கபல்லாபூர், கோலார், ராமநகர, துமகுரு, மண்டியா மற்றும் மைசூரு போன்ற அண்டை மாவட்டங்களுக்கு மக்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். தற்போது கர்நாடகாவில் லாக்டவுன் என்பதால் அவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர். பெங்களுரு மாநகராட்சியின் @ ப்ளோர்-தடுப்பூசி டுவிட்டர் கணக்கு மற்றும் பல டெலிகிராம் குழுக்களில் பெங்களுரு புறநகர் மற்றும் பிற மாவட்டங்களில் தடுபூசி இருப்பை காட்டுகின்றன. இதை வைத்து மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications