கன்னடரை தாக்கிவிட்டு நாடகமாடுவதா? விமானப்படை அதிகாரிக்கு எதிராக களமிறங்கிய கன்னட அமைப்பு.. பரபரப்பு
பெங்களூர்: பெங்களூரில் விமானப்படை அதிகாரியிடம் பைக்கில் வந்த கால்சென்டர் ஊழியர் கன்னடத்தில் பேசி திட்டி தாக்கியதாக கூறப்படும் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னடரான கால்சென்டர் ஊழியர் கொடுத்த புகாரில் விமானப்படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் சிவி ராமன் நகரில் உள்ள டிஆர்டிஓ பேஸ் 1 டவுன்ஷிப்பில் வசித்து வருபவர் ஷில்லாதித்யா போஸ். இவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் மதுமிதா. இவரும் விமானப்படையில் தான் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலையில் இருவரும் காரில் வீட்டில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்தவருக்கும், காரில் சென்ற ஷில்லாதித்யா போஸ்க்கும் பிரச்சனை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அதன்பிறகு மதுமிதா தனது கணவர் ஷில்லாதித்ய போஸை அங்கிருந்து காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனை செல்லும் வழியில் ஷில்லாதித்ய போஸ் ரத்தம் சொட்ட சொட்ட பேசியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‛‛பைக்கில் வந்தவர் டிஆர்டிஓவை சேர்ந்தவர்களா நீங்கள் என்று தாக்கினார். நெற்றியில் சாவியை வைத்து தாக்கினார். ரத்தம் கொட்டியது. உதவிக்கு யாரும் வரவில்லை. விமானப்படை கமாண்டராக நான் மக்களை காக்கும் நிலையில் யாரும் என்னை பாதுகாக்கவில்லை. பைக்கில் வந்தவருக்கு ஆதரவாக என்னை திட்டினர்'' என்று கூறினார்.
ஷில்லாதித்யா போஸின் மனைவி மதுமிதா பையப்பன ஹள்ளி போலீசில் புகாரளித்தார். அதில் பைக்கில் வந்தவர் காரில் மோதி தகராறில் ஈடுபட்டதாக தெரிவித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தாவரகெரேவை சேர்ந்த விகாஷ் குமார் என்ற கால்சென்டர் ஊழியரை கைது செய்தனர். அதன்பிறகு விகாஷ் குமார் பதிலுக்கு போலீசில் புகாரளித்தர். அதில், ‛‛கார் தான் முதலில் பைக்கில் வந்து மோதியது. இதனை தட்டிக்கேட்டபோது என்னை தாக்கினர். கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர். கீழே தள்ளி மிதித்தனர்'' என்று கூறினார்.
இதையடுத்து பையப்பனஹள்ளி போலீசார் விமானப்படை அதிகாரி ஷில்லாதித்யா போஸ் மீதும் கொலை முயற்சி உள்பட மேலும் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குப்பதிவு என்பது இன்று காலையில் தான் அறிவிக்கப்பட்டது. தற்போது ஷில்லாதித்யா போஸ் கொல்கத்தாவில் தலைமறைவாகி உள்ளார்.
முன்னதாக கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று இரவு பையப்பனஹள்ளி போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விகாஷ் குமாருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதோடு விமானப்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி கர்நாடகா ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் செட்டி கூறுகையில், ‛‛கன்னடர்கள் யூனிபார்ம் அணிந்திருக்கும் நம் நாட்டு வீரர்களை எப்போதும் மதிப்பார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் செயல்பாடு விமானப்படை அதிகாரி போல் இல்லை. அவர் பெங்களூர் மற்றும் கன்னட மக்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார். அவர் விமானப்படைக்கான ஒரு கறை.
ஏனென்றால் அந்த அதிகாரி விகாசை தாக்கி அவரது செல்போனை எடுத்து தூரம் எறிந்துள்ளார். இது ரவுடி நடத்தை. சிசிடிவி கேமரா காட்சிகள் மட்டும் இல்லாவிட்டால் விகாசை ரவுடி என்று முத்திரை குத்தி இருப்பார்கள். இந்த விவகாரத்தில் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். அதுமட்டுமின்றி பெங்களூர் நகரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் அட்ராசிட்டியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டாஸ்க் போர்ஸை முதல்வர் உருவாக்க வேண்டும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications