போலீஸ் மீது பழிபோட விரும்பவில்லை.. மன்னிச்சுடுங்க! பெங்களூர் நெரிசலுக்கு என்ன காரணம்? டிகே சிவக்குமார்
பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துயரமான இந்த சம்பவத்துக்கு கர்நாடக மக்கள் மற்றும் பெங்களூர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். மேலும் காவல்துறை மீது பழி போட விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் சீசனில் கோப்பையை பெறாமல் இருந்து வந்த ஆர்சிபி அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றது. 'ஈசாலே கப் நமதே' என்று சொல்லி வந்த ஆர்சிபி ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஆர்சிபி வெற்றியை கொண்டாடினர். பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போட்டி அகமதாபாத்தில் நடந்ததால், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி விழா கொண்டாட கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது. இந்த வெற்றி விழாவில் அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முறையான திட்டமிடல் இன்றி வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதற்கிடையே இந்த பெருந்துயரமான சம்பவத்துக்கு கர்நாடக மக்கள் மற்றும் பெங்களூர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூர் மற்றும் கர்நாடக மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேரணி நடத்த திட்டமிட்டோம். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்வம் மிகுதியில் வந்த இளைஞர்கள் மீது தடியடி நடத்த முடியாது. நிலவரம் குறித்து பெங்களூர் கமிஷனரிடம் கேட்டறிந்துள்ளேன்.
நானும் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்க்க இருக்கிறேன். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறை மீது நான் பழிபோட மாட்டேன். போதிய ஏற்பாடுகளை காவல்துறை செய்து இருந்தது. ஆர்வ மிகுதியில் வரும் ரசிகர்களை நாங்கள் தடுக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications