பெங்களூர் தமிழ் அறக்கட்டளை சார்பில் இலவச ஆன்லைன் தமிழ் கல்வி.. எழுத, படிக்க ஈஸியாக கற்றுக் கொள்ளலாம்
பெங்களூர்: இணையவழியில் இலவசமாக தமிழ்க் கற்றுக் கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெங்களூர் தமிழ் அறக்கட்டளை இந்த இணையவழி கல்வியை உங்களுக்கு வழங்குகிறது.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் தங்கள் சந்ததிகள் தமிழ் கற்காமல் போய்விடுமோ என்ற குற்ற உணர்வோடுதான் இருக்கிறார்கள். இனி, அந்த நிலைமை தேவையில்லை. நீங்கள் எங்கேயிருந்தாலும், ஆன்லைனில் அழகுற தமிழ் கற்று அசத்த முடியும்.

இது குறித்து தமிழ் அறக்கட்டளை-பெங்களூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாதகாலத்திற்கான இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழறிஞர் பொள்ளாச்சி நசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல்முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் 30 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ்க்கற்றல் வகுப்புகள், அக்.1 முதல் 30-ஆம் தேதிவரையில் நடக்கவிருக்கிறது. ஜூம்(குவியம்) வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியை கற்பிக்கும் கதைகள், நாப்பிறழ் பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத்தரப்படுகின்றன.
இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை https://forms.gle/rTSskW857x53hgQz8 என்ற கூகிள்ஃபார்மில் செப்.30-ஆம் தேதிமாலை 5 மணிக்கு பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும்.
கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி முழுக்க இலவசமானதாகும். மேலும், இந்த பயிற்சி வகுப்புகளில் பயின்றோர் குழந்தைகள், தமிழில் அழகாக எழுதி காட்டும்போது பெரும் மகிழ்ச்சியடைந்ததாக ஏற்கனவே தமிழ் படித்த மாணாக்கர்களின் பெற்றோர் ஆனந்தத்தோடு தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து பயோடெக் நிறுவனம் ஒன்றில், வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர் கூறுகையில், இந்த வகுப்பில் எனது 10 வயது குழந்தையை சேர்த்து விட்டிருந்தேன். இவர்கள் தமிழ் கற்றுக் கொடுக்கும் விதம் ரொம்பவே எளிமையானதாகவும், எளிதாக புரிந்து கொள்ளத்தக்கதாகவும் இருந்தது. மிக விரைவாக எனது மகன் தமிழ் கற்றுக்கொண்டு விட்டார். கட்டணம் செலுத்த விரும்புவோர் நன்கொடை மாதிரி வழங்கினால் வகுப்புகளை நடத்தும் செலவீனங்களை ஈடுகட்ட அது உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications