"820 அடி உயரம்.." தெற்காசியாவின் மிக உயரமான ஸ்கைடெக்.. ரூ.500 கோடி செலவில் பெங்களூரில் அமைகிறது
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் சுமார் 820 அடி உயரத்தில் மிகப் பெரிய கட்டிடத்தைக் கட்ட அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த கட்டிடம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வசதிகளைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து வேறு சில கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் உள்ள சித்தராமையா அரசு அம்மாநில தலைநகர் பெங்களூரில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது அங்கே மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டத்திற்குக் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

820 அடி உயரம்: அதன்படி பெங்களூரில் சுமார் 250 மீட்டர் அதாவது 820 அடி உயரத்தில் மிகப் பெரிய கட்டிடம் வர இருக்கிறது. 500 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த கட்டிடம் தெற்காசியாவின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும். பெங்களூர் ஸ்கைடெக் என்ற இந்த திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரின் மிக முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமாக இது இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குதுப்மினார் நினைவுச்சின்னத்தின் உயரம் 73 மீட்டர் ஆகும். அத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் இந்த பெங்களூர் ஸ்கைடெக் குதுப்மினார் விட 3 மடங்கு உயரமாக இருக்கும். தற்போது பெங்களூரின் மிக உயரமான கட்டிடமான சிஎன்டிசி பிரசிடென்ஷியல் டவரின் உயரம் 160 மீட்டர் ஆகும். அதை விட இது சுமார் 4.5 மடங்கு உயரமானதாகும்.
கர்நாடக அரசு: இது குறித்து கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறுகையில், "தெற்காசியாவின் மிக உயரமான ஸ்கைடெக்கிற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரை (பெங்களூர்) 360 டிகிரியில் காட்டும் வகையில் ₹ 500 கோடி செலவில் இந்த ஸ்கைடெக் நகரத்தில் கட்டப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த ஸ்கைடெக் பெங்களூருக்கு வெளியில் அமைந்துள்ள நைஸ் சாலையில் கட்டப்படும் எனக் கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவர உலகத் தரம் வாய்ந்த வசதிகளை இது கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நகரின் மிகப் பெரிய சுற்றுலா மையமாக வளர்த்தெடுக்கக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் எளிதாக இங்கே வந்து செல்ல மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்கை டெக்: இந்த ஸ்கை டெக்கில் ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் வளாகம் அமைகிறது. அதைத் தவிரச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வேறு பல வசதிகளை இது கொண்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், அங்கே என்னவெல்லாம் அமையப் போகிறது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சிக்கல்: கர்நாடக அரசு இந்த ஸ்கைடெக்கை முதலில் பெங்களூரின் மையப் பகுதியில் கட்ட திட்டமிட்டிருந்தது. இருப்பினும், அதில் இரு சிக்கல்கள் இருந்தன. அதாவது இந்த கட்டிடத்திற்கு சுமார் 25 ஏக்கர் நிலம் தேவைப்படும். நகரின் மையப் பகுதியில் 25 ஏக்கர் நிலத்தைக் கண்டுபிடிப்பது கடினம். அடுத்து பெங்களூர் நகரில் பாதுகாப்புத் துறையின் கீழ் பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. அப்படி இருக்கும் போது இவ்வளவு உயரமான கட்டுமானம் வந்தால் அது பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர்களும் ஆட்சேபனை தெரிவித்தன.
மேலும், நகரின் நடுவில் மிக உயரமான கட்டுமானத்தை எழுப்புவது பொதுமக்களுக்கும், அங்குள்ள ராணுவ விமான தளங்களுக்கும் கூட அச்சுறுத்தலாக இருக்கும். இதை எல்லாம் கருத்தில் கொண்டே பெங்களூருக்கு வெளியில் இந்த ஸ்கைடெக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த ஸ்கைடெக் திட்டத்துடன் பெங்களூரில் ஹெப்பால் முதல் சில்க்போர்டு சந்திப்பு வரையில் 1269 ஆயிரம் கோடி ரூபாய் இரு வழி சுரங்கப்பாதையை அமைக்கவும் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications