வாடகை காரில் போகும் பெண்களே ஜாக்கிரதை.. மொபைலில் மட்டும் பேசவே பேசாதீங்க.. புதிதாக பிரச்சனை
பெங்களூர்: பெங்களூரில் வாடகை காரில் சென்ற பெண் ஒருவர் சந்தித்த கொடுமை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாடகை கார் அதாவது கேப் மற்றும் பைக் டாக்சி போன்றவை பிரபலமாக உள்ளது. சாதாரண ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பைக் டாக்சியை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் பெங்களூர், சென்னையில் பைக் டாக்சி இன்னும் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை . அதாவது பைக்கை கமர்ஷியல் விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

இதனால் பைக் டாக்சி என்பதே சட்ட விதிமீறல்தான். பைக் டாக்சிக்கள் இந்த விதி முறையையும் மீறித்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த பைக் டாக்சிகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதால் பெரிதாக கண்டுகொள்ளப்படுவது இல்லை.
இன்னொரு பக்கம் இது போன்ற கேப் மற்றும் பைக் டாக்சி போன்றவற்றில் நிறைய குற்றச்செயல்களும் நடக்கின்றன. பெருநகரங்களில் இந்த கேப்கள் பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக செல்ல முடியும். இதற்கு பணம் மிக குறைவு,. அதேபோல் டிராபிக்கில் எளிதாக செல்ல முடியும் என்பதால் மக்கள் அதிகம் இது போன்ற கேப்களை பயன்படுத்துகின்றனர்.
என்ன நடந்தது ? : இந்த நிலையில்தான் பெங்களூரில் வாடகை காரில் சென்ற பெண் ஒருவர் சந்தித்த கொடுமை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பெங்களூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேபில் சென்றுள்ளார். அப்போது தோழி ஒருவருடன் போனில் பேசியபடி சென்றுள்ளார்.
அதில் தன்னுடைய பள்ளி கால தோழியிடம் பேசியபடி சென்றுள்ளார். இதில் பல முக்கியமான விஷயங்களை, பள்ளி கால நினைவுகளை, பள்ளியில் நடந்த சம்பவங்களை பகிர்ந்தபடி சென்றுள்ளார். இதை எல்லாம் அந்த கேபின் டிரைவர் கிரன் என்பவர் தனது செல்போனில் ரெக்கார்ட் செய்துள்ளார்.
அப்படி ரெக்கார்ட் செய்தவர் சரியாக ஒரு வருடம் கழித்து தனது லுக்கை மாற்றிவிட்டு அந்த பெண்ணை சந்தித்து உள்ளார். அதன்பின் அந்த பெண்ணிடம் அவரின் பள்ளி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு.. நான் உங்கள் பள்ளி நண்பன் என்று கூறி உள்ளார். அந்த பெண் போனில் பேசிய விஷயங்களை அப்படியே தனக்கு தெரிந்தது போல கிரண் பேசி உள்ளார். அதன் மூலம் அந்த பெண்ணுடன் நெருக்கமாகி நட்பாகி உள்ளார்.
இதன் மூலம் அவருடன் நட்பாக பழகி பழகி கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பணம், நகைகள் வாங்க தொடங்கி உள்ளார். அதில், 750 கிராம் தங்க நகைகளை முதலில் கடனாக வாங்கி உள்ளார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில லட்சம் என்று 20 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.
இப்படி பணம் வாங்கிய கிரண் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கூடுதல் பணம் கேட்டுள்ளார். அந்த பெண் திரும்ப பணம் கேட்டபோதெல்லாம் அதை கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார் கிரண். இதையடுத்து அந்த நபர் பற்றி தனது பள்ளி தோழிகளிடம் அந்த பெண் கூறி இருக்கிறார். அப்போதுதான் அந்த நபர் தங்கள் பள்ளியில் படிக்கவே இல்லை என்பதை கண்டுபிடித்து உள்ளார்.
அவருக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து உள்ளார். அவர் பள்ளித்தோழன் இல்லை என்பதை அறிந்து கொண்ட அந்த பெண் ராமமூர்த்தி காவல் நிலையத்தில் அந்த நபருக்கு எதிராக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் போனில் அன்று அந்த பெண் பேசியதை வைத்து அந்த பெண்ணை ஏமாற்றியதை கிரண் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications