சில்மிஷம் செய்த நபரை பிடித்து மிதித்த பெங்களூர் பெண்!
பெங்களூர்: பெங்களூர் பூங்காவில் காலையில் ஜாகிங் சென்ற பெண்ணை சீண்டினார் ஒரு நபர். கோபமடைந்த அவர் பயந்து ஓடாமல், அந்த நபரைத் துரத்திப் பிடித்து மிதித்து விரட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸிலும் புகார் கொடுத்த அப்பெண், அந்த சம்பவத்தையும் அப்படியோ வீடியோவில் பதிவு செய்து தனது பேஸ்புக்கிலும் போட்டுள்ளார்.
எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள். வயது வித்தியாசமே இல்லை. குடித்து விட்டு தாறுமாறாக தவறுகளில் ஈடுபடுவது, பலாத்காரம் செய்வது என்று நாடு தாறுமாறாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபகாலமாக பல்வேறு பாலியல் கொடுமைகளைச் சந்தித்து வரும் பெங்களூரில் ஒரு துணிச்சல் மிகுந்த பெண், தன்னைச் சீண்டிய மனிதரை நையப்புடைத்துள்ளார்.
காலையில் ஜாகிங்
சம்பந்தப்பட்ட பெண் இதுகுறித்துக் கூறுகையில், நான் தினசரி ஒரு பூங்காவில் ஜாகிங் செல்வது வழக்கம். அதுபோல சம்பவத்தன்றும் (வெள்ளிக்கிழமை) போய்க் கொண்டிருந்தேன்.
சீண்டிய நபர்
அப்போது ஒரு நபர் என்னை சீண்டினார், கிண்டல் செய்தார். இதனால் கோபமடைந்த நான் அவரை விரட்டினேன். அவர் தப்பி ஓட முயன்றார். நான் விடவில்லை. தொடர்ந்து ஓடி அவரைப் பிடித்து உதைத்தேன்.
சரியான பாடம்
என்னைச் சீண்டிய அந்த நபருக்கு நான் சரியான பாடம் கற்றுக் கொடுத்தேன். அத்தோடு நில்லாமல் போலீஸிலும் புகார் கொடுத்தேன். அவர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு, ஆதரவு கொடுத்தார்கள்.
மாற்றத்தை நாம்தான் கொண்டு வர வேண்டும்
என்னைப் போல எல்லாப் பெண்களும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். மாற்றம் வர வேண்டும் என்றால் அதை நாம்தான் கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் இந்த வீடியோவையும் போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அப்பெண்.
முழங்கால் போடுடா...
அந்த வீடியோவில் தன்னைச் சீண்டிய நபரை அந்தப் பெண் துரத்துகிறா். அந்த நபர் தனது ஹெல்மெட்டால் முகத்தை மறைத்தபடி சாலையில் ஓடுகிறார். ஆனால் விடாமல் துரத்தும் அந்தப் பெண் அந்த நபரைப் பிடிக்கிறார். பின்னர் அவரை முழங்கால் போட்டு உட்காரப் பணிக்கிறார். பின்னர் அவரை தனது காலால் மிதிக்கிறார். இதை பலர் பார்க்கிறார்கள். அதன் பின்னர் அந்த நபர் ஓடி வி்ட்டார். இந்தக் காட்சியை அந்தப் பெண்ணுடன் வந்த ஒருவர் படம் பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications