Bangalore Auto Driver: பெங்களூரில் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த வட மாநில பெண்.. காலில் விழ வைத்த கன்னடர்கள்
பெங்களூர்: பெங்களூரில் இருசக்கர வாகனத்தில் வந்த வட இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆட்டோ ஒன்று லேசாக உரசியதால் ஆத்திரமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பயந்துபோன அந்த பெண் டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெங்களூர், பெல்லந்தூர் என்ற இடத்தில் தனது ஸ்கூட்டரில், வட இந்திய இளம் பெண் வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ, ஸ்கூட்டர் மீது உரசியதால் ஆட்டோ டிரைவருடன் பெண்ணுக்கு மோதல் வெடித்தது.

உடனே ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறு செய்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் அதை வீடியோ எடுத்தார். கோபமடைந்த பெண், ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்தார்.
ஆனாலும் விடாமல் வீடியோ எடுத்த டிரைவர், அதில் "அந்த பெண்ணின் இரு சக்கர வாகனத்தின் மீது எனது ஆட்டோ மோதியிருந்தால் அதற்காக போலீஸில் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு என்னை செருப்பால் அடித்தது அநியாயம்.
கன்னடர்களை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள்" என அந்த டிரைவர் வீடியோவில் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெல்லந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் பெயர் லோகேஷ் (33) என்பதும் அந்த பெண், பீகாரை சேர்ந்த பங்குரி மிஸ்ரா (28) என்பதும் தெரியவந்தது. ஓட்டுநரை பல முறை செருப்பால் அடித்த இந்த வீடியோ வைரலானது. இதை கன்னட நெட்டிசன்கள் கண்டித்தனர்.
இதனிடையே ஒரு நாள் கழித்து, ஆட்டோ டிரைவரின் ஆதரவாளர்கள் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் மற்றும் கணவர் பயந்தபடியே மன்னிப்பு கேட்டு ஆட்டோ டிரைவர் காலில் விழுகிறார்கள். காவல்துறை தலையீடு இல்லாமல் இப்படி ஒரு மன்னிப்பு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் காவல்துறை மூலம் பெண் மீது நடவடிக்கை எடுக்காமல் இப்படி மிரட்டப்பட்டுள்ளது என்ற கேள்வியை தமிழ் நெட்டிசன்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எழுப்பியபடி இருப்பதையும் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications