ஸ்கூட்டரில் ஹாயாக வந்தனர்.. பாருக்கு வெளியே வைத்து ஓனரை சுட்டுக் கொன்றனர்.. அதிர்ந்து போன பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரின் மிக முக்கியமான ஒரு இடத்தில் பலர் கண் பார்வையில், பார் ஓனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் முக்கியமான வணிக பகுதி பிரிகேட் ரோடு. அங்கு டூயட் பார் என்ற பெயரில் மதுபான கடை நடத்தி வந்தவர் மணிஷ் என்ற சரவதம் ஷெட்டி.
நேற்று இரவு 9 மணிக்கு தனது மதுபான பாருக்கு வெளியே நடந்து வந்தபோது, ஷெட்டி, சரியாக குறி வைத்து சுடப்பட்டார். அங்கேயே துடித்து விழுந்த அவர் அருகே உள்ள மல்லையா மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்.

டியோ ஸ்கூட்டர்
இருப்பினும் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வந்த 2 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ஸ்கூட்டரை அங்கேயே கொலையாளிகள் விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

உயரதிகாரிகள்
இந்த அதிர்ச்சி தகவலை அறிந்ததும் போலீஸ் கமிஷனர் கமல் பந்த், துணை போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் போலீஸ் கமிஷனர், தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர். மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு வரை அந்தப் பார் நடைபெறும். எனவே அவர் 9 மணிக்கு வெளியே வர தேவை இல்லை. ஆனாலும் செல்போன் அழைப்பு ஒன்று வந்ததால் அதை பேசிக்கொண்டே பாருக்கு வெளியே மணிஷ் ஷெட்டி நடந்து வந்துள்ளார். அப்போது திடீரென இரண்டு மூன்று ரவுண்டுகள் இவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உள்ளார் மணிஷ் ஷெட்டி.

நிழலுலக தாதா பழக்கம்
மணிஷ் ஷெட்டி, சிக்மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜாவுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. கடந்த 20 வருடமாக பெங்களூரிலேயே வசித்து வருகிறார். இவர் மீதும் கிரிமினல் வழக்குகள், மங்களூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கத்தி, அரிவாள்தான் பெங்களூர் பாணி
கொலை, கடத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவருக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றன. எதிராளி கும்பலை சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பொதுவாக கடலோர மாவட்டங்களில் ரவுடிக் கும்பல்கள் இடையே மோதல் நடைபெறும் போது துப்பாக்கி சூடு நடைபெறுவது வழக்கம். பெங்களூர் ரவுடிகள், வட்டாரத்தில், அரிவாள், கத்தி, வாள் போன்றவைதான் பயன்படுத்தப்படும். எனவே இந்த தாக்குதல், மங்களூர் உள்ளிட்ட கடலோர கர்நாடகா பகுதிகளில் நடைபெறும் ரவுடி கும்பல் தாக்குதலுக்கு ஈடாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கேங் வார்?
கூலிப்படையினர் மங்களூரு பகுதியில் இருந்து இங்கு வர வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரிகேட் ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு பெங்களூரில் ரவுடி கும்பல்கள் இடையே மோதல் ஆரம்பித்து விட்டதா? அதுவும் துப்பாக்கியை எடுத்து நடுரோட்டில் சுடும் அளவுக்கு நிலைமை போய்விட்டதா என்று மக்கள் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications