BBMP-க்கு குட்பை.. பெங்களூரில் உதயமானது 5 மாநகராட்சி.. எப்படி செயல்படும் தெரியுமா? முழு விவரம்
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சியை 5 ஆக பிரிக்க வசதியாக ‛கிரேட்டர் பெங்களூர் கவர்னன்ஸ்(திருத்தம்) மசோதா 2025' என்பது கர்நாடகா சட்டசபையில் நிறைறே்றப்பட்டது. இந்த மசோதா சட்டமான நிலையில் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள், 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால் இந்த பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி பிபிஎம்பி எனும் பெங்களூர் மாநகராட்சி செயல்பட்டு வந்தது. மொத்தம் 198 வார்டுகள் இருந்தன.

பெங்களூர் நகரின் மக்கள்தொகை ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால் பெங்களூர் மாநகராட்சியை நிர்வாக ரீதியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி மேம்பாட்டு துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் பெருநகர பெங்களூரு (கிரேட்டர் பெங்களூரு) ஆணைய திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார். சட்டசபை, சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரும் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து அந்த மசோதா சட்டமானது. இந்நிலையில் தான் பெங்களூரில் நடைமுறையில் இருந்த பிபிஎம்பி எனும் பெங்களூர் மாநகராட்சி முறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல் பெங்களூர் மாநகராட்சி 5 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூர் கிழக்கு, பெங்களூர் மேற்கு என்று மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மாநகராட்சி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாநகராட்சிக்கான ஆணையர்கள் நியமிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வார்டு கவுன்சிலர்கள் இல்லை. மேயர்கள் இல்லை. இதனால் நிர்வாக காரணங்களுக்காக Greater Bengaluru Authority என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக முதல்வர் இருப்பார். இந்த அமைப்பின் கண்காணிப்பின் கீழ் ஒரே குடையின் கீழ் 5 மாநகராட்சிகளும் செயல்பட உள்ளது.
மேலும் பெங்களூர் மாநகராட்சியின் வார்டு எல்லைகள் வரையறுத்து அறிவிப்புகள் வெளியான பிறகு தேர்தல் என்பது 5 மாநகராட்சிகளுக்கும் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூர் மாநகராட்சியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் தற்போது 5 மாநகராட்சி உருவாக்கப்பட்டு இருப்பதன் மூலம் ஒவ்வொரு மாநகராட்சியின் எல்லைகளும் சுருங்கி இருக்கும். அதேபோல் வார்டுகளின் எல்லைகளும் குறைவாகவே இருக்கும். இதனால் ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக அதனை சரிசெய்ய முடியும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications