பெங்களூர் பந்த்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படம் முன்பு கன்னட அமைப்பினர் இழிசெயல்!
பெங்களூர்: காவிரி பிரச்சனையை முன்வைத்து இன்று நடத்தப்பட்டு வரும் பெங்களூர் பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை வைத்து கன்னட அமைப்பினர் செய்த இழி செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கி இருந்தது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசோ, காவிரியில் சொற்ப நீரைத்தான் திறந்துவிட்டுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான பங்கை திறந்துவிடக் கூடாது என கர்நாடகா பாஜக முதலில் போராட்டத்தைத் தூண்டிவிட்டது. இதனைத் தொடர்ந்து கன்னட விவசாய அமைப்புகள், கன்னடர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர் ம்றியல், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இன்று பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பெங்களூர் பந்த் அறிவிப்பை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே விடுமுறை அறிவித்துவிட்டன. அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. பல இடங்களில் கடைகள், ஹோட்டல்கள் திறந்திருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இத்தடையை மீறி பெங்களூர் நகரின் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறிய் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் உடனுக்குடன் அப்புறப்படுத்தி கைது செய்து வருகின்றனர்.
இப்போராட்டங்களின் போது கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வைத்து இழிவான செயலை செய்தது அதிர்ச்சியைத் தந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்துக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து திதி கொடுத்தும் அவர் உருவப் படம் முன்பாக ஆண்களும் பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தை முன்வைத்து கன்னடர்கள் செய்த இந்த இழிசெயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இழிசெயலை தடுக்காமல் பெங்களூரில் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததும் பெரும் வேதனைக்குரியதாகும்.













Click it and Unblock the Notifications