பெங்களூர் நெரிசல் சம்பவம்.. ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம்! சித்தராமையா அதிரடி
பெங்களூர்: ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த நிலையில், பெஙக்ளூர் காவல் ஆணையர் உள்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரிக்கவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஆர்சிபி அணி ஏற்பாட்டாளரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஆர்சிபி அணி ஐபிஎல்லில் கோப்பையை வென்றதை விழாவாக கொண்டாடப்பட்டது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த விழா நடந்த நிலையில், அதனை கொண்டாட அதிகளவில் ரசிகர்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னேற்பாடுகள் இன்றி இந்த விழாவுக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தது தான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும் 35 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க முடியும் இடத்திற்கு 2 லட்சம் பேர் வருகை தந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அரசு விளக்கம் அளித்தது.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக வந்து விசாரணை நடத்தியது. அப்போது இந்த விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக அரசா அல்லது கர்நாடக கிரிக்கெட் வாரியமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,பெங்களூர் மாவட்ட ஆட்சியர், பிசிசிஐ, ஐபிஎல் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து ஒரு நபர் ஆணையம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் இந்த ஆணையம் விசாரணை நடத்தும்.
மேலும் கர்நாடக கிரிக்கெட் சங்க ஏற்பாட்டாளர்களையும் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆர்சிபி அணி நிகழ்ச்சி மேலாளரை கைது செய்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையும், நீதிபதி விசாரணையும் நடக்கும். இதேபோன்று பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளனர் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications