கர்நாடக அரசுக்கு மேலும் ஒரு அடி.. பெங்களூர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க் ராஜினாமா!
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான, பெங்களூர் சிவாஜி நகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், கூட்டணி அரசிலிருந்து, ராஜினாமா செய்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சருமான, ராமலிங்க ரெட்டி, ரோஷன் பெய்க் உள்ளிட்ட பலருக்கும், அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. பாஜக தீண்டத்தகாத கட்சி கிடையாது என்று கருத்து தெரிவித்தார் ரோஷன் பெய்க்.
சிவாஜி நகர் தொகுதி அதிகப்படியாக முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் வசிக்கக்கூடிய தொகுதி ஆகும். இந்த நிலையில் ரோஷன் பெய்க், இவ்வாறு கூறிய கருத்து காங்கிரஸ் தலைமையை கோபப்படுத்தியது. எனவே அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக ஒழுங்கு கமிட்டி முடிவெடுத்து அறிவித்தது.
இந்த நிலையில்தான், அவர், பெங்களூரில் தலைமைச் செயலகமான, விதானசவுதாவிற்கு, வந்து சபாநாயகர் ரமேஷ்குமாரை, சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து உள்ளேன் என்று தெரிவித்து விட்டு கிளம்பினார்.
அதிமுக பாணியில் கர்நாடக காங்கிரஸ்.. எதிர்ப்பு எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை.. அதிரடி அறிவிப்பு
அடுத்ததாக பாஜகவில் சேர்வதற்கு திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்து விட்டார். இதனிடையே கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏகளின், எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, மூவர் ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி ஆட்சியில் இருந்து விலகியுள்ள, எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஏற்கனவே சட்டசபையில் எண்ணிக்கை பலத்தை இழந்து விட்டது கூட்டணி அரசு. இருப்பினும், இவர்கள் யாருடைய ராஜினாமா முடிவையும் இதுவரை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை என்பதால், ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்னும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.