பெங்களூருவில் வீட்டிற்கு முன் காரை நிறுத்தினால் ஆண்டுக்கு ரூ. 5000 கட்டணம்
வீட்டுக்கு முன்பு காரை பார்க் செய்தால் வருடத்திற்கு ரூ. 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பெங்களூரு: வீட்டிற்கு முன் இனி இலவசமாக காரை நிறுத்த முடியாது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். வீட்டுக்கு முன்பு காரை பார்க் செய்தால் வருடத்திற்கு ரூ. 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பெங்களூரு நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலருக்கும் தலைவலிதான். பலரும் வீடுகளுக்கு உள்ளே ஒரு காரும், வெளியே தெருவில் ஒரு காருமாக பார்க் செய்திருப்பார்கள். கார் பார்க்கிங் இல்லாத வீடுகளிலும் கூட கார் இருக்கும் என்பதால் தெருக்களில் , பிளாட்பாரங்களில் வீடுகளுக்கு முன்பு கார் பார்க்கிங் செய்வது அங்கு அதிகமாகவே இருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது நகர்ப்புற வளர்ச்சித்துறை. அதன்படி வீடுகளுக்கு முன்பு கார் நிறுத்துவதாக இருந்தால் வருடத்திற்கு ரூ. 5000 கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் மட்டுமே இனிமேல் காரை வீட்டுக்கு முன்பு தெருவில் பார்க் செய்து கொள்ளமுடியும்.
இதுதொடர்பான ஆலோசனை 2012ம் ஆண்டே தொடங்கி விட்டது. ஆனால் தற்போதுதான் அமலுக்கு வந்துள்ளது. இடத்துக்கு ஏற்றார் போல கட்டணம் மாறுபடுமாம். ஒரே மாதிரியாக இருக்காதாம். வீடுகளுக்கு முன்பு பார்க் செய்வது, தெருவில் நிறுத்துவது, எங்காவது போகும்போது காரை தெருவில் பார்க் செய்வது என அனைத்து விதமான பார்க்கிங்குகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்து கொண்டு வருகிறது. பெங்களூரு மாநகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கும் அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து அதிகம் காணப்படும் பகுதிகளில் ஒருவழிப்பாதை, போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வாகன எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன.
பெங்களூரு மாநகராட்சி சார்பில் வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் பல்வேறு இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் வீதிகளில் நிறுத்தப்படுகின்றன. வீட்டின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. பார்க் மற்றும் ரோட்டின் மீதும் நடைபாதையிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பெங்களூருவில் சுமார் 70 லட்சம் வாகனங்கள் இருக்கும் நிலையில் தினந்தோறும் சில ஆயிரம் வாகனங்கள் நகரின் பல்வேறு போக்குவரத்து அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. வாகனங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது. அதே நேரம் வாகனங்கள் புதிதாக பதிவு செய்யும் போது அதை நிறுத்தி வைப்பதற்கு இடம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து அதன் பிறகே வாகனங்களின் எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வீட்டில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன? அவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதற்கு பார்க்கிங் வசதி இருக்கிறதா? என்பன உள்ளிட்ட விபரங்கள் அளிக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதுதவிர அரசு காலி நிலங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்தும் அரசு பரிசீலனை நடத்தி வருகிறது.
எனவே, புதிதாக வாகனங்கள் வாங்க நினைக்கும் நபர்கள் கார்களை வாங்க முடியும் அதே நேரம் போக்குவரத்து அலுவலகத்தில் அதை பதிவு செய்வதற்கு முடியாது. அப்படியே பதிவு செய்யவேண்டும் என விரும்பினால், கார் வாங்க நினைக்கும் நபர் அவரின் வீட்டில் காரை நிறுத்தி வைப்பதற்கு இடவசதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்து பிரமாண பத்திரத்தை இணைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும். ஒருவேளை வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கு இட வசதி இல்லை என்பதை மறைத்து முறைகேடாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் முறைகேடாக பதவி பிரமாணம் தாக்கல் செய்த நபருக்கு சிறை தண்டனையும் கிடைக்கும்.
பெங்களூருவில் வாகன பார்க்கிங் நிறுத்தம் இல்லாத நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு கார்கள் இருக்கின்றன. அதுவும் போதாது என்று மேலும் புதிதாக கார் வந்தால் அதையும் வாங்குவதற்கு முயற்சி செய்கின்றனர். இதன் காரணமாக வாகனங்களின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்கவேண்டும் என்பதற்காகவே மாநில அரசு இந்த புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.