பெங்களூரை புரட்டிப்போட்ட மழை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை! புது ரெக்கார்ட் - ஆலங்கட்டியின் பின்னணி
பெங்களூர்: பெங்களூர் நகரில் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் நகரில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை உருவானது. மேலும் சாலைகளில் ஆலங்கட்டிகள் குவிந்து கிடந்து காஷ்மீர் போல் பெங்களூர் காட்சியளித்தது. இந்நிலையில் தான் இதுவரை இல்லாத வகையில் மழை புதிய சாதனை படைத்துள்ளது. திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ததன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் நகரில் கோடை வெயிலால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் நேற்று திடீரென்று நகரின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. எம்ஜி ரோடு, டிரினிட்டி சர்க்கிள், எம்ஜி ரோடு, ராஜாஜி நகர், மெஜஸ்டிக், கோரமங்களா, பசவனகுடி, சாந்தி நகர் உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த கனமழையின் காரணமாக மருத்துவமனையில் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர். திடீரென்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. சில குடியிருப்பு பகுதிகளில் 2 முதல் 3 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. இந்திராநகர், கோரமங்களா, பிடிஎம் லேஅவுட் மற்றும் ஜெயதேவா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பனிப்பிரதேசமாக மாறிய பெங்களூர்
இதனால் நகரில் நிலவிய வெப்பநிலை மளமளவென குறைந்தது. மக்கள் நிம்மதியடைந்தனர். இடியுடன் கூடிய மழை பெய்ததோடு, பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பல சாலைகளில் ஆலங்கட்டிகள் சாலைகளில் சிதறி பனிபிரதேசம் போல் பெங்களூரை மற்றியது. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.
புதிய ரெக்கார்ட்
இந்நிலையில் தான் பெங்களூரில் பெய்த மழை புதிய ரெக்கார்ட்டை படைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணிநேரத்தில் அதிகப்படியான மழை பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி 24 மணிநேரத்தில் பெங்களூரில் 108.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதுதான் ஏப்ரல் மாதத்தில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவாக இருந்தது. இது நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை பெங்களூரில் 111 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன்மூலம் 2001ல் படைக்கப்பட்ட ரெக்கார் உடைக்கப்பட்டுள்ளது. இது புதிய சாதனையாகும்.
'மஞ்சள் அலர்ட்'டால் மேஜிக்
பெங்களூர் நகரில் நேற்று முதல் வரும் மே 2ம் தேதி வரை நகரின் பல இடங்களில் நல்ல மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது. இதற்காக 'மஞ்சள்' அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும். அதன்படி நேற்று பெங்களூரில் 111 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஆலங்கட்டி மழை பெய்தது ஏன்?
அதேவேளையில் நேற்று பெங்களூரில் மழை பெய்யும் என்று மட்டுமே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆலங்கட்டி மழை பெய்யும் என கூறவில்லை. ஆனால் ஆலங்கட்டி மழை பெய்தது. இதற்கு முக்கிய காரணமாக சில விஷயங்களை வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள், ''பெங்களூர் நகரில் ஆலங்கட்டி மழைக்கு முக்கிய காரணம் வெப்பசலன நடவடிக்கை தான். காற்றின் வெப்பநிலை உயரும்போது வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை ஏற்படும். இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்டவை சேர்ந்து தான் ஆலங்கட்டி மழையை உருவாக்கி உள்ளது'' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications