மரத்துப்போன காலால் வந்த மரணம்.. Crocs-க்குள் இருந்த பாம்பு கடித்தது கூட தெரியாமல் இறந்த இன்ஜினியர்
பெங்களூர்: பெங்களூரில் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் கிராக்ஸ் செருப்பில் பாம்பு இருந்தது தெரியாமல் அதனை அணிந்து நடந்து சென்றார். இதில் பாம்பு இறந்தது. அதேபோல் பாம்பு கடித்து கூட தெரியாமல் வீட்டுக்கு சென்ற சாப்ட்வேர் இன்ஜினியர் வாயில் நுரை தள்ளி இறந்தார். விபத்து ஒன்றில் அவரது காலில் அடிப்பட்டு மரத்துப்போனதால் பாம்பு கடித்ததை கூட அறியாமல் அவர் மரணித்தார். இதுபற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக வீட்டுக்கு வெளியே நாம் விட்டு செல்லும் ஷு மற்றும் கிராக்ஸ் வகை செருப்புகளை மீண்டும் அணியும்போது அதனை ஒருமுறை பரிசோதித்து கொள்ள வேண்டும். அவசரக்கதியில் அணிந்து விட்டு செல்லக்கூடாது. ஏனென்றால் ஷு மற்றும் கிராக்ஸ் செருப்புகளில் பாம்பு, தேள் உள்ளிட்டவை இருந்து கடிக்கலாம்.

இது நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். அப்படியொரு சம்பவம் தான் தற்போது பெங்களூரில் நடந்துள்ளது. Crocs வகை செருப்பில் பாம்பு இருப்பதை அறியாமல் ஒரு மணிநேரம் அணிந்து நடந்து சென்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பலியாகி உள்ளார். செருப்பில் இருந்த பாம்பு கடித்தது தான் அவரது மரணத்துக்கு முக்கிய காரணமாகும்.
செத்து கிடந்த பாம்பு
பெங்களூர் பன்னரக்கட்டா அருகே உள்ள ரங்கநாதா லே-அவுட்டில் வசித்து வந்தவர் மஞ்சு பிரகாஷ். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் கடைக்கு சென்று கரும்பு சாறு குடித்தார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் அவர் அணிந்திருந்த Crocs செருப்பை கழற்றி போட்டுவிட்டு தனது அறைக்கு சென்று தூங்கி கொண்டிருந்தார். அப்போது உறவினர் வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் அவர் அணிந்திருந்த செருப்பின் அருகே பாம்பு ஒன்று செத்து கிடந்தது.
நுரை தள்ளி இறந்த இன்ஜினியர்
மேலும் காலில் மிதிப்பட்டு அந்த பாம்பு செத்ததை அவர் உணர்ந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக குடும்பத்தினரை அலர்ட் செய்தார். அனைவரும் மஞ்சு பிரகாஷ் அறைக்கு சென்றனர். அங்கு அவர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அவரது காலில் இருந்து ரத்தம் கசிந்து இருந்தது.
இதனால் கிராக்ஸில் பாம்பு இருப்பதை அறியாமல் மஞ்சு பிரகாஷ் அதனை அணிந்து சென்றதும், அப்போது பாம்பு அவரை கடித்ததில் அவர் இறந்ததையும் குடும்பத்தினர் உணர்ந்தனர். உடனடியாக அவரை குடும்பத்தினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மஞ்சு பிரகாஷ் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
மரத்துப்போன கால்
இதுபற்றி மஞ்சு பிரகாஷின் சகோதரர் கூறுகையில், ‛‛மஞ்சு பிரகாஷ் கடந்த 2016 ம் ஆண்டு பஸ் விபத்தில் சிக்கினார். அவரது காலில் பலத்த அடிபட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டு வந்தார். இருப்பினும் விபத்தில் அடிப்பட்ட கால் மரத்துப்போனது.
அந்த காலில் உணர்ச்சி எதுவும் இருக்காது. இப்போது மரத்துப்போன காலில் அணியும் கிராக்ஸ் செருப்பில் பாம்பு இருந்தது. அதனை அறியாமல் அவர் அணிந்து கடைக்கு சென்று வீடு திரும்பினார். செருப்பில் இருந்த பாம்பு மூச்சுத்திணறி செத்துள்ளது.
பெரும் சோகம்
முன்னதாக அந்த பாம்பு கடித்துள்ளது. மரத்துப்போன கால் என்பதால் மஞ்சு பிரகாஷால் பாம்பு கடித்ததை உணர முடியவில்லை. இப்போது இறந்துவிட்டான்'' எனக்கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் நாம் அனைவரும் ஷு, கிராக்ஸ் உள்பட எந்த செருப்பை அணிந்தாலும் ஒருமுறை அதனை சோதித்துவிட்டு அணிவது நல்லது. இல்லாவிட்டால் விஷ ஜந்துவின் கடிக்கு ஆளாக நேரிடலாம்.












Click it and Unblock the Notifications