காயம்பட்ட குட்டி யானை.. கலங்கிபோன ராகுல் காந்தி.. உருக்கமாக செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்
பெங்களூர்: ராகுல் காந்தி கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் நாகரஹொளே வனப்பகுதியில் சபாரி சென்றபோது காயம்பட்ட குட்டி யானையை பார்த்து கவலைப்பட்ட நிலையில் அவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் சாதிக்க துடித்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கட்சியை வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கை பெற அக்கட்சி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் முக்கியமானது தான் பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், கட்சியை பலப்படுத்தவும் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை துவங்கி உள்ளார்.
நவம்பர் வருதா? பயப்பட வேண்டாம் சென்னை மக்களே..எல்லாமே ரெடி! அமைச்சர் கே.என்.நேரு சொன்ன குட் நியூஸ்!
குமரியில் துவங்கிய நடைப்பயணம்
இந்த நடைப்பயணமானது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து 3,500 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி நடந்து ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து இந்த நடைப்பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் வரை தமிழகத்தில் நடைப்பயணம் நடந்தது. தற்போது ராகுல்காந்தியின் நடைப்பயணம் கேரளாவில் நடந்தது. அங்கு 15க்கும் அதிகமான நாட்கள் நடைப்பயணம் நடந்தது.
கர்நாடகத்தில் நடைப்பயணம்
கடந்த 30ம் தேதி கேரளாவில் முடிந்த நடைப்பயணம் கர்நாடகாவில் துவங்கியது. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ராகுல் காந்தியின் நடைப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு மத்தியில் தான் நேற்று மண்டியா மாவட்டத்தில் நடந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி பங்கேற்றார். இது கட்சியினருக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
காயம்பட்ட குட்டி யானையால் கலங்கிய ராகுல்
முன்னதாக ராகுல் காந்தி கடந்த 5ம் தேதி நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. அப்போது அவர் நாகரஹொளே எனும் வனப்பகுதியில் சபாரி செய்தார். அப்போது ஒரு குட்டி யானை காயத்துடன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டது. இதை பார்த்த ராகுல் காந்தி மிகவும் கவலையடைந்தார். காயம்பட்ட யானை தனது தாய் யானையுடன் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்தார். அதில், ‛‛ஒரு தாயின் அன்பு.. இந்த அழகான குட்டி யானை காயம்பட்டு உயிருக்கு போராடுவதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.
ராகுல் காந்தி கடிதம்
மேலும் ராகுல் காந்தி கட்சி பாகுபாட்டை மறந்து குட்டி யானையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடியாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு(பாஜக) கடிதம் எழுதினார். அதில், ‛‛நாகரெஹாளே புலிகள் ரிசர்வ் வனப்பகுதியில் சபாரி சென்றபோது மிகவும் வலி நிறைந்த காட்சியை கண்டேன். குட்டி யானை காயத்துடன் உயிருக்கு போராடுவதை கண்டேன். இது எனது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அந்த குட்டி யானைக்கு தற்போதைய நிலையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால் அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து குட்டி யானையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடிதம் எழுதி உள்ளேன். உயிருக்கு போராடும் குட்டி யானையை காப்பாற்ற நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.
பசவராஜ் பொம்மை பதில் கடிதம்
இந்த கடிதம் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சென்றடைந்தது. இந்நிலையில் பசவராஜ் பொம்மை நேற்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛ அக்டோபர் 5ம் தேதியில் நீங்கள் எழுதிய கடிதம், காயம்பட்ட யானையின் போட்டோ ஆகியவை எனக்கு கிடைத்தது. குட்டி யானையின் மீதான உங்களது கவலையை நான் பாராட்டுகிறேன். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டேன். வனவிலங்குகள் தாக்கியதில் குட்டி யானை காயமடைந்ததாக தெரிவித்தனர். தற்போது அந்த யானை தாய் யானையையே சார்ந்து அதனுடனேயே உள்ளது. தாய் யானை, குட்டி யானையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தொடர் கண்காணிப்பு
மேலும் இந்த சூழலில் சிகிச்சைக்காக தாயிடம் இருந்து குட்டி யானையை பிரிப்பது சரியாக இருக்காது எனவும், அது குட்டி யானையின் உடல்நலனை இன்னும் மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து உடல்நலனை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். குட்டி யானையை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குரசு மேற்கொண்டு வருகிறது. குட்டி யானை மீதான உங்களின் கவனத்துக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுக்கள்'' என கூறியுள்ளார்.