ஆஹா. .அலேக்.. தேர்தலுக்கு 2 நாளுக்கு முன்பு காங்.குக்கு தாவிய பாஜக வேட்பாளர்!
பெங்களூர்: கர்நாடகாவின் ராம்நகர் சட்டசபை தொகுதியி இடைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அந்த தொகுதியின் பாஜக வேட்பாளரே காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இவ்வாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது ராம்நகர் மற்றும் சென்னபட்னா ஆகிய அருகாமையிலுள்ள இரு தொகுதிகளில் போட்டியிட்டார் மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி. ஒக்கலிக ஜாதியினர் அதிகமுள்ள இந்த இரு தொகுதிகளிலும் எதிர்பார்த்ததை போலவே குமாரசாமி வெற்றி பெற்றார்.
இதையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராகியுள்ளார்.
[புயலாய் கிளம்பியுள்ள சந்திரபாபு நாயுடு... புதுக் கூட்டணிக்கு அச்சாரமிட ராகுலுடன் சந்திப்பு!]

இடைத் தேர்தல்கள்
இரு தொகுதிகளிலும் எம்எல்ஏவாக இருக்க முடியாது என்பதால், ராம்நகர் சட்டசபை தொகுதி உறுப்பினர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு நாளை மறநாள், நவம்பர் 3ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதோடு, ஜம்கண்டி சட்டசபை தொகுதி, மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் இடைத் தேர்தல்கள் நடக்கின்றன.

மதசார்பற்ற ஜனதாதளம் கோட்டை
ராம்நகர் என்பது மதசார்பற்ற ஜனதாதளத்தின் கோட்டை. அதற்கு அடுத்தபடியாக காங்கிரசுக்கு செல்வாக்கு உண்டு. பாஜக 3வது இடத்தைதான் பிடிக்க முடியும் என்று கருதப்படும் இடம். எனவே மஜத-காங்கிரஸ் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி பாஜகவிற்கு அது ஆதாயமாகிவிட கூடாது என்பதால், காங்கிரஸ் கட்சி, மஜதவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

அனிதா குமாரசாமி
இதையடுத்து குமாரசாமியின் மனைவி, அனிதா, இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மஜதவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதால், கோபமடைந்த காகங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் 1 மாதம் முன்பாக இணைந்தார். இதையடுத்து அவரே, ராம்நகர் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரசில் ஒரு குரூப் வாக்குகளும் இதனால் தங்களுக்கு கிடைக்கும் என்ற குஷியில் இருந்தது பாஜக தலைமை.

கட்சி தாவல்
ஆனால், கர்நாடக உதய தினமான நவம்பர் 1ம் தேதியான இன்று, பாஜகவிற்கு பெரிய ஷாக்கை ராஜ்யோத்சவா, பரிசாக கொடுத்துவிட்டார் சந்திரசேகர். ஆம், தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறும் தேதியெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், திடீரென காங்கிரசில் இணைந்துவிட்டார். விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள் என பேட்டிகளில் திட்டி தீர்க்கிறார் பாஜக கர்நாடக மாநில தலைவர் எடியூரப்பா. ஆபரேஷன் தாமரை மூலமாக கையிலிருந்து இழுத்துவரப்பட்ட சந்திரசேகர், தாமரையை, கை கழுவி விட்டார். இதனால் அனிதா குமாரசாமி வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications