கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவராக பாஜகவின் எம்.கே.பிரனேஷ் நியமனம்!
பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவையில் துணைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த எம்.கே.பிரனேஷ் இன்று தேர்வு செய்யப்பட்டார்.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் எம்.கே.பிரனேஷ் தலைவராகியுள்ள நிலையில் அங்கு பாஜக-மஜத கைகோர்த்துள்ளது.
காங்கிரசும், மஜதவும் பாம்பும் கீரியையும் போல் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட மேலவை
கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்த எம்.கே.பிரனேஷ் இன்று கர்நாடக சட்ட மேலவையில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மொத்தம் 75 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் காங்கிரஸ்-29, பாஜ-31, மதசார்பற்ற ஜனதா தளம் -14, சுயேட்சை-1 என 71 உறுப்பினர்கள் இருந்தனர்.

காங்கிரஸ்-மஜத உறவு முறிந்தது
கடந்த மூன்றாண்டுகளாக மேலவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி இருந்தது. மேலவை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப்சந்திரஷெட்டியும், துணைதலைவராக மஜதவை சேர்ந்த தர்மேகவுடாவும் இருந்தனர். இந்நிலையில் பிரதாப்சந்திரஷெட்டிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் பாஜ கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திடீரென மஜத ஆதரவு கொடுத்ததின் மூலம் காங்கிரஸ்-மஜத கூட்டணி முறிந்துவிட்டது.

பாஜக-மஜத கூட்டணி கைகோர்ப்பு
இதற்கிடையே துணைதலைவராக இருந்த மஜதவை சேர்ந்த தர்மேகவுடா கடந்த மாதம் மர்மமான முறையில் இருந்தார். இந்த நிலையில் நடந்த தேர்தலில்தான் எம்.கே.பிரனேஷ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட மஜத முக்கிய பங்கு வகித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக-மஜத மீண்டும் கைகோர்த்துள்ளது தெளிவாகி உள்ளது.

காரணம் காங்கிரஸ்தான்
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடந்தது. அதன்பிறகு இந்த கூட்டணி கவிழ்ந்து பாஜக ஆட்சியை பிடித்தது. அதன்பின்பு காங்கிரசும், மஜதவும் பாம்பும் கீரியையும் போல் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றன. ஆட்சி கவிழ நீதான் காரணம், நான்தான் காரணம் என்று ஒருவரை குற்றம்சாட்டி வருகின்றனர். குமராசாமியும், சித்தராமையாவும் நேரடியாகவே குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் பாஜக-மஜத மீண்டும் ராசியாகி உள்ளது பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications