பெங்களூர் நெரிசல்.. இதுக்கெல்லாம் யார் பொறுப்பு.. சித்தராமையா உடனே சொல்லனும்! கொதித்த கர்நாடக பாஜக
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்சிபி வெற்றி விழா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகளவில் ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், கர்நாடக அரசு எந்தவித முன்னேற்பாடும் இன்றி அவசர கதியில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பதை சித்தராமையா சொல்ல வேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
18 ஆண்டு கால ஐபிஎல் சீசனில் முதல் முறையாக நடப்பு ஆண்டில் பெங்களூர் அணி கோப்பையை வென்று அசத்தியதால், இதனை விழாவாக கொண்டாட கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டது. இன்று மாலை 5 மணியளவில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெற்றி விழா கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் ரசிகர்கள் கூடியதாலும், அரசு சரியாக திட்டமிட்டு இந்த விழாவை நடத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் உள்ளே வெற்றி விழாவுக்கு நடுவே, வெளியில் ரசிகர்கள் உயிருக்கு போராடும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கர்நாடக அரசு எந்தவித முன்னேற்பாடும் இன்றி அவசர கதியில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பதை சித்தராமையா சொல்ல வேண்டும் என்றும், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "விளம்பரத்திற்காக அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் தவற விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? என்பதை சித்தராமையா கூற வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு கர்நாடக மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும்" என கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications