40% கமிஷன் கேட்டாங்களே.. 40 சீட் மட்டும் கொடுங்க போதும்.. கார்நாடகாவில் பாஜக மீது ராகுல் அட்டாக்
பெங்களூர்: எந்த ஒரு பணி நடக்க வேண்டும் என்றாலும் நீங்கள் 40 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. 40 சதவீத கமிஷன் பெறும் பாஜகவிற்கு இந்த முறை தேர்தலில் 40 இடங்களை மட்டுமே நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசினார்.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் படு பிசியாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்று தீவிர முனைப்பு காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது ராகுல் காந்தியும் கர்நாடகாவில் தங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:-
பிரதமர் மோடி, தான் ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லி வருகிறார். கர்நாடகாவில் உதவி ஆய்வளர் முறைகேடு, சோப்பு நிறுவன முறைகேடுகள் என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எந்த ஒரு பணி நடக்க வேண்டும் என்றாலும் நீங்கள் 40 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. 40 சதவீத கமிஷன் பெறும் பாஜகவிற்கு இந்த முறை தேர்தலில் 40 இடங்களை மட்டுமே நீங்கள் கொடுக்க வேண்டும்.
40 சதவீத கமிஷன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ள இந்த பணத்தை வைத்துதான் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவார்கள். கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஊழலுக்கு எதிராக பேசும் பிரதமர் மோடி இது பற்றி வாய் திறக்கவே இல்லை.
பிரதமர் மோடி அதானிக்கு இந்தியாவின் வளங்களை வழங்கியிருக்கிறார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்று நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். பாஜகவின் எம்.பி பதவி குறித்து கேள்வி கேட்டேன். அதன்பிறகு என்னை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து விட்டார்கள்.

அதானியின் ஷெல் நிறுவன முதலீடுகள் பற்றி கேள்வி கேட்டேன். அதன்பிறகு என்னை பேச அனுமதிக்கவில்லை. ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதால் பாஜக பயந்துவிட்டது. ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பாஜக கூறியது. ஆனால், அதை செய்யவில்லை. பாஜக போல ஒருபோதும் காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது.
வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். காங்கிரஸ் ஆட்சி அமைந்தல், வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அனுமதி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications