கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி? பெங்களூரில் திடீரென குவிந்த காங்கிரஸ் 'தலை'கள்- பரபர ஆலோசனை!
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூலம் சதி நடப்பதாக கூறி திடீரென பெங்களூரில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் சித்தராமையாவை ஊழல்வாதி போல சித்தரிக்கிறது பாஜக எனவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மனைவிக்கு, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த வீட்டு மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் பாஜக நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர். இதேபோல முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர சமூக ஆர்வலர் டிஜே ஆபிரகாமும் ஆளுநர் கெலாட்டிடம் அனுமதி கோரி இருந்தார். இதனையடுத்து முதல்வர் சித்தராமையா தம் மீதான ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் தர வேண்டும் என ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆளுநரின் இந்த நோட்டீஸுக்கு கர்நாடகா அமைச்சரவை கூடி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆளுநர் தமது நோட்டீஸை திரும்பப் பெறவும் கர்நாடகா அமைச்சரவை வலியுறுத்தியது. இன்னொரு பக்கம், முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பெங்களுரில் இருந்து மைசூர் நோக்கி பாஜக தலைவர்கள் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர். மைசூரில் வரும் 10-ந் தேதி பாஜக- ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து பிரம்மாண்ட போராட்டம் நடத்த உள்ளன.
இந்த பின்னணியில் பெங்களூரில் நேற்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்ட கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வர் சித்தராமையா இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், முதல்வர் சித்தராமையா நேர்மையானவர்; அவரை ஊழல்வாதியாக சித்தரிக்கிறது பாஜக. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநரை பாஜக ஆயுதமாக பயன்படுத்துகிறது. பாஜக- ஜேடிஎஸ் தலைவர்களின் மகன்கள் மீதான பலாத்கார மற்றும் மோசடி வழக்குகளில் இருந்து திசை திருப்பவே சித்தராமையா மீது பழி போடுகிறது பாஜக. மத்திய பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா மாநிலத்தைப் புறக்கணித்துள்ளது குறித்து பாஜக தலைவர்கள் யாரும் பேசவில்லை. நாங்களும் மக்களை சந்திப்போம். கர்நாடகா அரசின் திட்டங்களை பற்றி விளக்க இருக்கிறோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கன்னட மக்களுக்கானன துரோகத்தை எடுத்துச் சொல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications