அமித்ஷா “ஆபரேசன் பெயிலியர்”.. பரிதாப நிலையில் பாஜக! கர்நாடகாவில் ஓங்கும் “கை” - கருத்துக்கணிப்பு
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், கடந்த மாதத்தை விட இம்மாதம் பாஜகவுக்கான ஆதரவு குறைந்து இருப்பதுடன், காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக ஆட்சியில் உள்ள ஒரு தென்மாநிலமான கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசின் பதவிகாலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அந்த மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவித்தது.

மே மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்று உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பல்வேறு வியூகங்களை கையில் செயல்படுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வெளியிட்டு அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. பாஜகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக வேட்பாளர்கள் தேர்வில் அக்கட்சித் தலைமை தீவிர கவனம் செலுத்தி வந்தது.
இதில் பாஜக தேசிய தலைமையே நேரடியாக தலையிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டது. திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் கர்நாடக தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் பாஜக சார்பில் கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 2 கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் லோக் போல் என்ற தனியார் அமைப்பு கடந்த மார்ச் மாதம் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது. அப்போது 45 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பாஜக 77 - 83 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 21 - 27 இடங்களிலும், இதர 1 - 4 தொகுதிகளிலும் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அதே அமைப்பு 65 பேரிடம் கருத்துக்கணிப்பு எடுத்து இந்த மாதத்திற்கான முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில், இதில் காங்கிரஸ் கட்சி 128 முதல் 131 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், பாஜக 66 - 69 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 21 - 25 இடங்களிலும், இதர 0 - 2 தொகுதிகளிலும் வெல்லும் என்று முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு காங்கிரஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்து இருப்பதும் பாஜகவுக்கான ஆதரவு குறைந்து இருப்பது தெரிகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட அதிக இடங்கள் வெல்லும் என்ற இந்த கருத்துக்கணிப்பை போல் முடிவுகள் வந்தால், தென் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரு மாநிலத்தையும் பாஜக இழக்கும்.












Click it and Unblock the Notifications