எங்க “உயிரையே” காப்பாத்தல.. கட்சியே வேணாம்! ராஜினாமா செய்த பாஜகவினர் - அதிர்ச்சியில் கர்நாடக அரசு
பெங்களூரு: பாஜக இளைஞரணி நிர்வாகி கர்நாடகாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக கூறி கையெழுத்து போட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடாவில் உள்ள மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
பிரவீன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கல்வீச்சு
இதனை தொடர்ந்து இன்று சுல்லியா, கடபா மற்றும் புத்தூர் தாலுக்காக்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்புடன் பல இடங்களில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை கையில் எடுத்தனர். அப்போது முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இறுதி ஊர்வலம்
புத்தூரிலிருந்து மங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து போல்வார் என்ற பகுதியில் இந்துத்துவா அமைப்பினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் காரணமாக சேதமடைந்தது. அதே நேரம் கொல்லப்பட்ட பிரவீன் நெட்டாரு உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான நெட்டாருவுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மீதே தாக்குதல்
பிரவீன் நெட்டாருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக தலைவர் நலின் கடீல் மற்றும் மாநில அமைச்சரும் பாஜக மாவட்ட பொறுப்பாளருமான சுனில் குமார் வந்துகொண்டிருந்தனர். அப்போது புத்தூர் என்ற பகுதியில் அவர்கள் வந்த காரை சுற்றி வளைத்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இந்துத்துவா அமைபினர் தாக்குதல் நடத்தி காரை கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் தடியடி
பாஜக தலைவர், அமைச்சர் தாக்கப்பட்டதுடன் தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல போலீசார் வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்து விரட்டினர். இதனால் தொடர்ந்து தக்ஷின கன்னடா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
|
அரசுக்கு எதிராக முழக்கம்
மோதல் காரணமாக தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடையடைப்பு போராட்டம் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவே முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே சிக்மகளூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் உயிர்களை காக்க கட்சி தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications