கர்நாடகா.. கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட 303 பேர் கருப்பு பூஞ்சையால் பலி.. பெங்களூரில் அதிகம்!
பெங்களூர்: கொரோனா, நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக மீண்ட 300க்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் மியூகோமைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த இறப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவை பெங்களூரில் பதிவாகியுள்ளன.
கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமைகோசிஸ் திடீரென வேகமாக பரவியதால், இந்தியாவில் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் கீழ் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது.
மியூகோமிகோசிஸ் ஒரு நோயாளியின் முகம், மூக்கு, கண் சுற்றுப்பாதை மற்றும் மூளை போன்றவற்றையும் பாதிக்கும், இது பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. தாமதமாக சிகிச்சைக்கு சென்றால் கண்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுகிறார்கள் மருத்துவர்கள். அதை விட தாமதமாக சென்றால், உயிருக்கே உலை வைக்கிறது கருப்பு பூஞ்சை.

பெங்களூரில் அதிகம்
கொரோனா சிகிச்சை பெறுவோர் அல்லது சிகிச்சை முடிந்து சில நாட்கள் அல்லது சில வாரங்கள் ஆன நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பரவுகிறது. கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மொத்தம் 303 பேர் இறந்துள்ள நிலையில், அதில் 104 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்கிறது அந்த மாநில புள்ளி விவரம். இவர்கள் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களாகும். ஜூலை 9 ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடகாவில் 3,491 நோயாளிகள் மியூகோமைகோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகங்கள்
கொரோனா தவிர, கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வேறு காரணங்கள் இல்லை என்றாலும், உடலில் அதிக சர்க்கரை அளவு, ஸ்டீராய்டு பயன்பாடு மற்றும் டெல்டா உருமாறிய கொரோனா ஆகியவை இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்க கூடும் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மருந்து பற்றாக்குறை
மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பூஞ்சை எதிர்ப்பு மருந்தான லிபோசோமால் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவும் நோயாளிகள் உயிரிழந்துபோனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்டீராய்டுகள் பயன்படுத்துதல்
மியூகோமிகோசிஸ் நுரையீரலுக்கும் பரவுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் 100% நுரையீரலை செயலிழக்க செய்துவிட வாய்ப்பு உள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குனர் ரன்தீப் குலேரியா கருத்துப்படி, கருப்பு பூஞ்சை பெரும்பாலும் ஸ்ட்டீராய்டுகளை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறதாம். ரெம்டெசிவிர் போன்றவை ஸ்டீராய்டு மருந்து வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

குறைந்தது கொரோனா
இதற்கிடையில், பல வாரங்களுக்கு பிறகு முதல் முறையாக, புதிய கொரோனா கேஸ்கள் ஒரு நாளில் 2,000 க்கும் குறைந்துவிட்டன. கர்நாடகாவில் இறப்பு எண்ணிக்கையும், 56 ஆக குறைந்துவிட்டதாக மாநில சுகாதார புல்லட்டின் தெரிவிக்கிறது. "சனிக்கிழமையன்று 1,978 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 36,737 செயலில் உள்ள கேஸ்கள் ஆகும். அதே நேரத்தில் ரெக்கவரி 27,98,703 என்ற அளவுக்கு உயர்ந்தது. 2,326 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்" என்று அரசு புல்லட்டின் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications