ராஜ்பவனில் கோலாகலம்.. கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம்.. கர்நாடக முதல்வரானார் எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடக மாநில 25வது முதல்வராக பாஜகவை சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா இன்று பதவியேற்றார். அவர், பச்சை சால்வை அணிந்து, கடவுளின் பெயரால் பிரமாணம் செய்து கொண்டார்.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி கடந்த செவ்வாய்க்கிழமை, சட்டசபையில் நடந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கவிழ்ந்தது.

இந்த நிலையில், பாஜக தரப்பு கிணற்றில் போட்ட கல் போல அசைவின்றி இருந்தது. ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமைக்கு வராதது பல்வேறு யூகங்களை எழுப்பியது.
இந்த நிலையில் திடீர் மாற்றமாக, இன்று காலை சுமார் 10 மணியளவில் பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலாவை, எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இன்றே பதவிப் பிரமாணம் செய்யப்போவதாக பின்னர் எடியூரப்பா அறிவித்தார். இதன்படி இன்று மாலை 6.30 மணியளவில், கர்நாடக ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்தார் எடியூரப்பா. கர்நாடகாவில் 4வது முறையாக, எடியூரப்பா முதல்வராகியுள்ளது நினைவுபடுத்தத்தக்கது. அம்மாநிலத்தில் நிஜலிங்கப்பா தவிர, நான்கு முறை முதல்வரானது எடியூரப்பாதான். ஆனால் இதுவரை எப்போதும் எடியூரப்பா, 5 ஆண்டுகால ஆட்சிகாலத்தை பூர்த்தி செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் வஜுபாய் வாலா, அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவையில் வேறு யாரும் பதவியேற்றுக்கொள்ளவில்லை. பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் மட்டுமே மேலிடத்திலிருந்து வருகை தந்த தலைவராகும். மற்றபடி, கர்நாடக மாநிலத்திலிருந்து பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காங்கிரஸ், மஜத தலைவர்கள், இந்த நிகழ்வை புறக்கணித்தனர்.
தற்போதைய சட்டசபை பலத்தின் படி 103 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் பெரும்பான்மையை நிரூபித்து விடலாம். பாஜகவுக்கு தனித்தே 105 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications