இந்தியாவில் முதன் முறையாக.. பெங்களூர் குடிநீர் வாரியத்துக்கு கிடைத்தது BIS தர சான்று!
பெங்களூர்: கோடிக்கணக்கான மக்களுக்கு மாசற்ற நீரை விநியோகம் செய்து வரும் பெங்களூர் மாநகராட்சியின் 'குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம்' (BWSSB) BIS சான்று பெற்று அசத்தியிருக்கிறது. இந்தியாவில் முதன் முறையாக ஒரு மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் வாரியம் இந்த அங்கீகாரத்தை பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் பெங்களூரு முக்கியமானது. இங்குள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பை, BWSSB ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறது. பொதுவாக கார்ப்பரேஷன் தண்ணீர் என்றாலே அது தூய்மையாக இருக்காது என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், இந்த கற்பிதத்தை BWSSB உடைத்துக் காட்டியிருக்கிறது. எனவே பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்த அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முதலில் BIS என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள பொருட்களுக்கு தர நிலையை நிர்ணயிக்க BIS தரச்சான்று வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் குடிநீருக்கும், அதை விநியோகிக்கும் அமைப்புக்கும் இந்த சான்றை வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சான்றை பெறும் முதல் குடிநீர் வழங்கல் அமைப்பாக BWSSB இருக்கிறது.
இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. BWSSB விநியோகிக்கும் நீர் ஆறு, ஏரி, குளம் என எங்கிருந்து பெறப்படுகிறது? இந்த நீர் ஆதாரங்கள் தூய்மையானதாக இருக்கிறதா? பெறப்பட்ட நீர் சுத்திகரிக்கப்படுகிறதா? நீரை தூய்மையாக்க குளோரினேஷன் போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டுகிறதா? சுத்திகரிக்கப்பட்டு நீர் தேக்கி வைக்கப்படும் தொட்டிகள் தூய்மையானதாக இருக்கிறதா? பம்பிங் நிலையங்கள் மற்றும் பைப்புகள் மூலம் தரமான நீர் விநியோகிக்கப்படுகிறதா?

பைப்லைன் விநியோகத்தில் கசிவு இருக்கிறதா? மக்கள் பயன்படுத்தும் நீரை கண்காணிக்க துல்லியமான மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா? என பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாகதான் BIS சான்று வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எல்லா ஆய்வுகளிலும் பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியம் தேர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே இந்த வாரியம் விநியோகிக்கும் குடிநீர் 100% சுத்தமானது என்பது நிரூபணமாகியிருக்கிறது.
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், "மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதை நாங்கள் முதன்மை நோக்கமாக கொண்டிருந்தோம். BIS சான்றிதழைப் பெறுவது ஒரு மைல்கல். இந்த சான்று 'Brand Bengaluru' எனும் எங்களின் முயற்சிக்கு கூடுதலாக உதவும். நவீன நீர்வழங்கல் மற்றும் தரமான வாழ்க்கைக்கு ஏற்ற நகரம் பெங்களூர்தான். இந்த பெயரை காப்பாற்ற தொடர்ந்து முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
BWSSB சேர்மேன் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ் கூறுகையில், "கோடிக்கணக்கான பெங்களூர் மக்களுக்கு தூய்மையான குடிநீரை விநியோகித்து வரும் BWSSB-ன் அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாக BIS அங்கீகாரம் பார்க்கப்படுகிறது. இது துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான ஒருங்கிணைப்புக்கு கிடைத்த வெற்றி" என்று கூறியுள்ளார். ராம் பிரசாத் மனோகர், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடப்படுகிறது.
பெங்களூர் குடிநீர் வாரியத்திற்கு BIS விருது கிடைத்திருப்பது, மேலும் தரமான குடிநீர் விநியோகத்தை மக்களுக்கு வழங்கும் எங்களின் முயற்சியை ஊக்கப்படுத்தும் என்றும் வாரியத்தின் ஊழியர்கள் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications