கர்நாடகாவில் அமலுக்கு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.. முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகா அரசு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவர் தான் நிதி துறையையும் கையில் வைத்துள்ளார். விரைவில் கர்நாடகாவில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் விதானசவுதாவில்(கர்நாடகா சட்டசபை) முதல்வர் சித்தராமையா பட்ஜெட் சம்பந்தமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து சித்தராமையா ஆலோசித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
‛‛எங்களின் அரசு என்பது ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உள்ளது. நாங்கள் அறிவியல்பூர்வமான ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம். அது வரும் நாட்களில் அமல்படுத்தப்படும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். எங்கள் அரசின் நோக்கம் என்பது ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான்.
சிலர் தவறான புரிதல் காரணமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி கொள்ள வேண்டும். இத்தனை வருடங்கள் ஆகியும் சமத்துவம் ஏன் ஏற்படவில்லை? என்ற கேள்வியை கேட்டு கொள்ள வேண்டும். நாட்டின் சமத்துவமின்மையை ஒழிக்க வேண்டும். ஜாதி கட்டமைப்பு, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் பல மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை இழந்துள்ளனர். உண்மையில் யாராக இருந்தாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில், தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க எழுந்துள்ள கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சித்தராமையா, ‛‛1992ம் ஆண்டு இந்திரா சாவ்னி வழக்கு இடஒதுக்கீடு பற்றி சொல்கிறது. அதில் இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் முந்தைய அரசு பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கி உள்ளது. இது அரசியலமைப்பு கொள்கைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கிள் 15 மற்றும் 16 என்பது சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வழிவகுக்கிறது. ஆனால் முந்தைய அரசு அதனை மீறி உள்ளது '' என விமர்சனம் செய்தார்.
கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா இதற்கு முன்பு 2013 முதல் 2018 ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அந்த சமயத்தில் கர்நாடகாவில் சமூக பொருளாதார மற்றும் கல்வி சர்வே என்ற பெயரில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இது தான் கர்நாடகா ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த பணி என்பது ரூ.160 கோடி செலவில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 1.60 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த பணி கடந்த 2018-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் நடந்தது. இதனால் அந்த சர்வே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக வந்த நிலையில் சர்வே ரிப்போர்ட் என்பது கர்நாடகா மாநில பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மாநில ஆணையத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ஹேக்டே தலைமையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி சித்தராமையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ஒக்கலிகர் உள்பட சில சமுதாயத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதனால் இந்த சர்வே முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்போது ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி வரும் நிலையில் கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அமலுக்கு கொண்டு வரப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications