2 அஸ்திரம்.. தமிழகத்துக்கு தண்ணீரா? ‛நோ சான்ஸ்’ என சித்தராமையா போட்ட மெகா பிளான்! என்ன தெரியுமா?
பெங்களூர்: தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் இருக்க கர்நாடகா முதல்வர் சித்தராமையா, டிகே சிவக்குமார் முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பிரச்சனை என்பது விஸ்வரூபமாகி உள்ளது. சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இதனை ஏற்க கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூறி வருகிறது. அதோடு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து மண்டியா, பெங்களூரில் பந்த் நடந்தது. இன்று கர்நாடகா முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.
இதற்கிடையே தான் இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கர்நாடகா தண்ணீர் திறக்க முடியாது என கூறிய நிலையில் அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான சூழல் உருவானது. இறுதியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அக்டோபர் 15ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு என்பது கர்நாடகாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மீண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் தண்ணீர் திறக்க விரும்பவில்லை. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி இன்று சட்ட நிபுணர்களுடன் பெங்களூரில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை சுட்டிக்காட்டி தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்காமல் தப்பிப்பது என்பது பற்றி விவாதித்தனர்.
இதையடுத்து சட்ட நிபுணர்கள் சில முக்கிய விஷயங்களை எடுத்துரைத்தனர். அதன்பிறகு சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு காவிரியில் அக்டோபர் 15ம் தேதி வரை 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என எடுத்து கூறியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதேபோல் தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி வரை 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் எனக்கூறிய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்'' என்றார். இதன்மூலம் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் தப்பிக்க கர்நாடகா அரசு 2 முக்கிய முன்னெடுப்புகளை தற்போது கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications