காவிரி:தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உருவபடத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் கும்பல் எல்லையில் போராட்டம்!
பெங்களூர்: காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை எரித்து கன்னட அமைப்பினர் தமிழ்நாடு எல்லையில் நேற்று போராட்டம் நடத்தினர். இதேபோல ஈரோடு புளிஞ்சூர் எல்லையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு- கர்நாடகா எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து ஆகக் குறைந்தபட்சம் வினாடிக்கு 5,000 கன அடி நீரை, கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று ஆணையமும் பரிந்துரைத்தது. ஆனால் இதனை கர்நாடகா ஏற்கவில்லை.

பதற்றத்தில் மாண்டியா: தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட உத்தரவிட்ட காவிரி ஒழுங்காற்று ஆணையத்துக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை 2 நாட்களாக நடத்தி வருகின்றனர். மாண்டியாவில் போராட்டம் நடத்திய கன்னட விவசாயிகள் கைகளில் தட்டை ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். மாண்டியா சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மாண்டியா மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஈரோடு எல்லையில்.. : தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள புளிஞ்சூர் சோதனை சாவடியை நோக்கி கன்னட அமைப்பினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயிகள் 50 பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழ்நாடு- கர்நாடகா வாகனப் போக்குவரத்தை தடுக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர் அத்திப்பள்ளியில்.. : பெங்களூர்- ஓசூர் எல்லையான அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சலுவளி கட்சியினர் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர். 50 பேருடன் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் திடீரென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை கிழித்து எறிந்தார். இதனால் அத்திப்பள்ளி எல்லையில் இரு மாநிலப் போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
எல்லைகளில் போலீஸ் குவிப்பு: கன்னட அமைப்பினரின் போராட்டத்தால் தமிழ்நாடு- கர்நாடகா எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications