”கல்வி மாநிலங்களின் உரிமை” - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குரலுக்கு வலுசேர்க்கும் கர்நாடகா!
பெங்களூர்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; நீட் போன்ற கொடூர தேர்வுகளை ஒழிக்க இதுதான் ஒரே வழி என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் மாநில பட்டியலுக்கு கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அதுதான் தீர்வாக இருக்க முடியும் என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பல மாநிலங்களின் முதல்வர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் கர்நாடகா மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவும், கல்வி என்பது மாநிலங்களின் உரிமை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆளும் காங்கிரஸ் அரசு கைவிட முடிவெடுத்துள்ளது. இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடகா மாநில அரசின் புதிய கொள்கையை கைவிடும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, இது முட்டாள்தனமானது. நாட்டில் பல ஆண்டுகளாக புதிய கல்வி கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. புதிய கல்வி கொள்கை வரைவுக்கு முந்தைய சித்தராமையா அரசும் ஒப்புதல் தந்திருக்கிறது. இதில் சிறிய மாற்றங்களைத்தான் செய்யலாம். அதற்காக ஒட்டுமொத்தமாகவே கைவிடுவது என்பது மக்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் என எச்சரித்திருந்தார்.
இதற்கு கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பதில்: கல்வி என்பது மாநிலங்களுக்கு உரியது. மாநில பட்டியலில்தான் கல்வி இருந்தது. மாநிலங்கள் மீது டெல்லி ஏன் கொள்கைகளை திணிக்க வேண்டும்? மாநிலங்களின் மீது கல்வி சார்ந்த கொள்கைகளை மத்திய அரசால் திணிக்க முடியாது. எங்களுக்கு என சொந்த கல்வி கொள்கை இருக்கிறது. எங்கள் கல்வி கொள்கையை டெல்லி தீர்மானிக்க முடியாது. இந்தியா கூட்டாட்சி கட்டமைப்பைக் கொண்டது. இதில் பசவராஜ் பொம்மை வாயே திறக்காமல் இருக்க வேண்டும். நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல. கர்நாடகா மாநில கல்வி கொள்கைக்கு தம்மால் முடிந்த பங்களிப்பை பசவராஜ் பொம்மை வழங்க வேண்டும். இவ்வாறு கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications