சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தல்: பாஜகவுக்கு குட்பை சொல்லும் யோகேஷ்வர்.. காங்கிரஸ் சார்பில் போட்டி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர மறுக்கப்பட்டதால் பாஜகவின் யோகேஷ்வர் தமது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து சென்னபட்டணா தொகுதி வேட்பாளராக யோகேஷ்வர் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னபட்டணா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பாஜக ஒதுக்கியதால் யோகேஷ்வர் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.
கர்நாடகாவின் சென்னபட்டணா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் முன்னாள் முதல்வர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரான குமாரசாமி, சென்னபட்டணா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

சென்னபட்டணா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பாஜக ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் சென்னபட்டணா தொகுதியில் தாம் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என பாஜக எம்.எல்.சி. யோகேஷ்வர் முட்டி மோதிப் பார்த்தார். ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குதான் சென்னபட்டணா தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தி அடைந்தார் யோகேஷ்வர்.
இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் யோகேஷ்வர் போட்டியிட வாய்ப்பு தருவோம் என அக்கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தார். ஆனால் இதனை பாஜக மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் யோகேஷ்வர் தமது எம்.எல்.சி. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவை விட்டு விலகி காங்கிரஸில் இணைய இருக்கிறார் யோகேஷ்வர். சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக யோகேஷ்வர் போட்டியிடக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications