நெகிழ்ச்சி.. நிறைவேறிய கனவு.. தனது ஸ்டேஷனுக்கே எஸ்.ஐயான மகள்.. பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தந்தை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஐயாக பணியாற்றியவரின் மகளும் எஸ்.ஐயாக பணிக்கு தேர்வு ஆகியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் பணியிட மாறுதலாகி தந்தை செல்ல இருந்த நிலையில், அவரது பொறுப்புக்கு மகள் வந்துள்ளார். புதிய எஸ்.ஐயாக வந்த மகளை பூங்கொத்து கொடுத்து தந்தை வரவேற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஐயாக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரின் மகளும் எஸ்.ஐயாக அதே ஸ்டேஷனுக்கு பணி கிடைத்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் எனபவர் எஸ்.ஐயாக பணியாற்றி வருகிறார். ராணுவத்தில் பணியாற்றிய வெங்கடேஷ், 2006- ஆம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் இருந்து விலகி பின்னர் கர்நாடக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார்.

தற்போது மாண்டியாவில் உள்ள சென்ட்ரல் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக இருக்கும் வெங்கடேசுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வந்தது. அதாவது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அவருக்கு பணியிடம் மாற்றப்பட்டது. அதேவேளையில் தந்தையை போல காவல்துறையில் பணியாற்ற விரும்பிய வெங்கடேசின் மகள் வர்ஷாவும் எஸ்.ஐ தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் இருந்தார். அவரது பயிற்சி நிறைந்து காவல் நிலையத்தில் பணி ஒதுக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட முதல் பணியிடமே சென்ட்ரல் காவல் நிலைய எஸ்.ஐ பணிதான். ஆம் தந்தை பணியாற்றிய அதே இடத்திற்கு மகளுக்கு பணி ஒதுக்கப்பட்டது.
டிரான்ஸ்பர் ஆர்டர் வந்ததால் பணியிடம் மாறிய வெங்கடேஷ், புதிதாக பொறுப்புக்கு வந்த எஸ்.ஐ-யான தனது மகள் வர்ஷாவிடம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தந்தை பணி செய்யும் ஸ்டேஷனிலேயே பணியிடம் கிடைத்ததால் வர்ஷாவும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். புதிய எஸ்.ஐயான தனது மகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஸ்டேஷனுக்கு வரவேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து சென்ட்ரல் காவல் நிலைய எஸ்.ஐ வர்ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- "எனது வாழ்க்கையில் எனது அப்பாதான் ரோல் மாடலாக இருந்தார். எனவே எனது அப்பாவை போலவே போலீஸ் ஆக ஆசைப்பட்டேன். தற்போது அப்பா பணியாற்றிய இடத்திற்கே வந்ததில் மகிழ்ச்சி, அவரைப்போலவே பணியாற்றி பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றார்.
தான் பதவி வகித்த ஸ்டேஷனுக்கே மகளுக்கு பணி ஒதுக்கபட்டு இருப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய எஸ்.ஐ வெங்கடேஷ், "எனது மகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். எனது மகள் இந்த பதவிக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னை பெருமைப்படுத்தும் வகையில் அவர் சாதித்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications