விடுதி மாணவிகள் மேலும் 2 பேர் பலாத்காரம்.. மடாதிபதி மீது பாய்ந்த 2வது போக்சோ வழக்கு.. பரபர கர்நாடகா
பெங்களூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில் பெண் சமையல் தொழிலாளி ஒருவர் கொடுத்த புகாரில் மேலும் 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக மடாதிபதி மீது 2வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகா மடம் உள்ளது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருக சரணாரு உள்ளார். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் தங்கும் வசதியுடன் பள்ளி உள்ளது.
இந்த விடுதியில் தங்கி பள்ளியில் ஏராளமானவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது பாலியல் புகார் எழுந்தது.

மடாதிபதி மீது பலாத்கார புகார்
சித்ரதுர்காவில் விடுதியில் தங்கி 2 மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களை மடத்துக்கு அழைத்து மயக்க மருந்து கொடுத்து மடாதிபதி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் மைசூருக்கு சென்ற நிலையில் தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சிறுமிகள் கூறிய நிலையில் தொண்டு நிறுவனம் சார்பில் மைசூர் நசர்பாத் போலீசில் புகார் செய்யப்பட்டது.

கைது செய்த போலீஸ்
புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மடத்தின் நிர்வாகியாக உள்ள பசவராஜன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்னொரு புகார்
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நிலையில் பெண் சமையல் தொழிலாளி கொடுத்த பாலியல் புகாரில் அவர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண், தனது 2 மகள்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்தார். மடத்தின் விடுதியில் தங்கி படித்த நிலையில் மகளான 2 மாணவிகள் பலாத்காரம் செ்யப்பட்டதாக கூறி மடாதிபதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகு சரணாரு மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடந்தையாக இருந்ததாக கூறி சிறுமிகளின் விடுதி வார்டன் ரஷ்மி 25, என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications