கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்.. பெங்களூர் போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்.. ஆர்சிபி அணி மீதும் வழக்கு பதிவு
பெங்களூர்: ஆர்சிபி வெற்றி விழா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில், பெங்களூர் போலீஸ் கமிஷனர் தயானந்த் உள்பட 5 உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், ஆர்சிபி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனமான டிஎன்ஏ மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு நீண்ட நேரம் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு, அந்த அணியின் வெற்றிக் கொண்டாட்ட விழாவில் துயர சம்பவம் அரங்கேறியது. பெங்களூர் விதான சவுகா மற்றும் சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த ஆர்சிபி வெற்றி விழா கொண்டாட்டத்தில் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூர் போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று வியாழக்கிழமை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக 11 பேர் பலியாக காரணமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தராமையாவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் உள்பட 5 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தயானந்த் மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனர் விகாஸ்குமார், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர், உதவி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சித்தராமையா அறிவிப்பினை வெளியிட்டார்.
பெங்களூர் விதான சவுதாவில் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆர்.சி.பி. அணி வெற்றி விழா கொண்டாட்டத்தில் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு நபர் ஆணையம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா இது பற்றி கூறுகையில், பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் ஒரு நபர் நீதி விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும், இந்த ஆணையம் ஒரு மாதத்துக்குள் அறிக்கையினை அரசுக்கு வழங்கும் என்று கூறினார்.
இதேபோன்று ஆர்சிபி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனமான டிஎன்ஏ மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு துணையாக உள்ளது.
புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்
ஏற்கனவே நாங்கள் கூறியபடி மாஜிஸ்திரேட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிஐடி விசாரணைக்கு மாற்றவும் முடிவு செய்திருப்பதாகவும் சித்தராமையா கூறினார். இதற்கிடையே பெங்களூர் புதிய போலீஸ் கமிஷனராக சீமந்த்குமார் சிங்கை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் நகர புதிய போலீஸ் கமிஷனரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், பரமேஸ்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெங்களூர் நகர புதிய போலீஸ் சீமந்த்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீமந்த்குமார் சிங் 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் அவர் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.












Click it and Unblock the Notifications