சொல்ல சொல்ல போனால் எப்படி? கட்சியினர் நடுவே மோதிக்கொண்ட பாஜக அமைச்சர்கள்! பரபரத்த பெங்களூர்
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் விஜய சங்கல்ப யாத்திரை துவங்கி நடைபெற்று வருகிறது.
பெங்களூர்: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் பெங்களூரில் சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த வேளையில் அமைச்சர்களான அசோக், சோமண்ணா ஆகியோர் தொண்டர்கள் முன்பே யாத்திரை வாகனத்தில் மோதலில் ஈடுபட்டு பாதியில் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கர்நாடகா முழுவதும் சங்கல்ப யாத்திரையை பாஜக மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் இந்த சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் பணியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகிறது. மொத்தம் 4 குழுக்கள் விஜய சங்கல்ப யாத்திரையை மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.

பெங்களூரில் சங்கல்ப யாத்திரை
இந்நிலையில் தான் விஜய சங்கல்ப யாத்திரை பெங்களூரில் நடந்தது. நாகரபாவியில் இருந்து நாயண்டஹள்ளி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி யாத்திரை துவங்கியது. மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், எம்பி தேஜஸ்வி சூர்யா, வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா, வருவாய்த்துறை அமைச்சர் அசோக்(பெங்களூர் பத்மநாபநகர் எம்எல்ஏ) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த யாத்திரை நடக்கும் இடம் கோவிந்தராஜ நகர் சட்டசபை தொகுதிக்குள் வரும். இந்த தொகுதியில் தான் வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா எம்எல்ஏவாக தேர்வானார்.

இறங்கி சென்ற ஆர் அசோக்
இந்த யாத்திரை சென்றபோது மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், நாகரபாவி சர்ச்க்கிள் அருகே இறங்கி சென்றார். இதையடுத்து அமைச்சர் அசோக்கும் யாத்திரையை கைவிட்டு புறப்பட முயன்றார். அப்போது அமைச்சர் சோமண்ணா, யாத்திரை நாயண்டஹள்ளி வரை நடைபெற உள்ளது என கூறினார். ஆனால் அமைச்சர் அசோக் அதனை கேட்காமல் யாத்திரை வாகனத்தில் இருந்து இறங்கி தனது காரில் ஏறி சென்றார். இதற்கு அமைச்சர் சோமண்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.

பாதியில் நின்ற யாத்திரை
இந்த கருத்து மோதலால் சோமண்ணாவும் யாத்திரை வாகனத்திலிருந்து இறங்கி தனது காரில் புறப்பட்டு சென்றார். இதனால் யாத்திரை பாதியில் நின்றது. முன்னதாக சோமண்ணா-அசோக் இடையே நடந்த கருத்து பரிமாற்றத்தின் போதே சோமண்ணாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

காங்கிரஸில் இணைய போகிறாரா?
வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகி உள்ளார். பாஜக தலைவர்கள் கூட்டத்திலும், சங்கல்ப யாத்திரையிலும் பங்கேற்பதை அவர் தவிர்த்து வந்தார். இதற்கிடையே அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கிடையே தான் அவரது கோவிந்தராஜநகர் தொகுதியில் யாத்திரை நடத்தப்பட்ட நிலையில் அவர் பங்கேற்றார். இருப்பினும் அமைச்சர் அசோக் உடனான கருத்து மோதல் அவர் யாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது கர்நாடகா பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.











Click it and Unblock the Notifications