ரகசிய ஒப்பந்தம் இருக்கு.. கர்நாடகா முதல்வர் மாற்றம் பற்றி டிகே சிவக்குமார் போட்ட குண்டு! பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே யுத்தம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவி தொடர்பான ஒப்பந்தம் 5-6 தலைவர்களுக்கு மட்டுமே தெரியும். அது ரொம்ப ரகசியம் என்று கூறி மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இதனால் விரைவில் சித்தராமையாவுக்கு பதில் டிகே சிவக்குமார் முதல்வர் ஆகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக டிகே சிவக்குமார் தெரிவித்த விவரம் வருமாறு:
கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த சமயத்தில் டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவராக இருந்தார்.

இதனால் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவியது. இறுதியாக முதல்வர் பதவியை சித்தராமையா பெற்றார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியோடு சேர்த்து துணை முதல்வர் பொறுப்பு டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
இந்த சமயத்தில் இன்னொரு தகவல் வெளியானது. அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருப்பார். அதன்பிறகு அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராக இருப்பார் என்ற தகவல் வெளியானது. தற்போது இரண்டரை ஆண்டுகாலம் சித்தராமையா முதல்வராக நிறைவு செய்துவிட்டார். இதனால் முதல்வர் பதவியை டிகே சிவக்குமாரிடம் வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் முதல்வர் பதவி பகிர்வு தொடர்பாக டிகே சிவக்குமார், சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அனைவரும் அமைதி காத்து வருகின்றனர். இதனால் உண்மையிலேயே காங்கிரஸ் மேலிடம் இரண்டரை ஆண்டு இரண்டரை ஆண்டு என்று முதல்வர் பதவியை பகிர்வது தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமாரிடம் கட்டளையிட்டனரா? இல்லையா? என்பது பற்றிய கேள்வி உள்ளது.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் முதல் முறையாக அதுபற்றி வாய் திறந்துள்ளார். கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் உள்ள டிகே சிவக்குமாரின் சொந்த சட்டசபை தொகுதியான கனகபுராவில் நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛லீடர்ஷிப் (முதல்வர்) மாற்றம் தொடர்பாக 5 முதல் 6 தலைவர்கள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் ரகசியமானது. இதுபற்றி பொதுவெளியில் பேச நான் விரும்பவில்லை. நான் மல்லிகார்ஜூன கார்கேவை கடந்த வாரம் தான் சந்தித்தேன். இதனால் பெங்களூர் வந்தபோது அவரை சந்திக்கவில்லை'' என்று கூறியுள்ளார். டிகே சிவக்குமாரின் இந்த கருத்து தற்போது கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பை கூட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications