தமிழகம் பாணியில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ்
பெங்களூரு: அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுக்கும் என கூறப்படுகிறது. கொறடா உத்தரவு இல்லாத சூழலில் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததைப் போல கர்நாடகா சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.
பாஜக ஆதரவுடன் காங்கிரஸ்-ஜேடிஎஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்தனர். இதனை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்காததால் விவகாரம் உச்சநிதிமன்றத்துக்கு போனது.

உச்சநீதிமன்றமோ சபாநாயகரே முடிவெடுக்கலாம்.. அதே நேரத்தில் கொறடா உத்தரவு, அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் குமாரசாமி அரசு கவிழும் அபாயமே இருக்கிறது.
அதே நேரத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவகுமார் கூறியுள்ளார். இதனால் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுக்கும் என தெரிகிறது.
கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படாத சூழலில் ஆளுநரை சந்தித்தனர் என்ற ஒரே காரணத்துக்காகவே தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தமிழக சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. அதனால் தமிழகம் பாணியில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்க செய்ய வாய்ப்பிருக்கிறது என்கின்றன பெங்களூர் தகவல்கள்.












Click it and Unblock the Notifications