மிஸ்டர் பசவராஜ்! பிட்காயின் விவகாரத்தால் சி.எம். பதவிக்கு வேட்டு- காங். பிரியங்க் கார்கே வார்னிங்
பெங்களூர்: பிட்காயின் மோசடி விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி இழக்க நேரிடும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது பிட்காயின் விவகாரம். கர்நாடகாவில் கடந்த வாரம் ஹேக்கர் ஶ்ரீகி என்ற ஶ்ரீகிருஷ்ணா அண்மையி0ல் கைது செய்யப்பட்டார். அரசு இணைய பக்கங்களை ஹேக் செய்தது, டார்க் வெப் மூலமாக போதைப் பொருள் விற்பனை, இதற்காக கிரிப்டோ கரன்சியில் பணம் பெறுவது ஆகியவை ஶ்ரீகி மீதான குற்றச்சாட்டுகள்.

பிட்காயின் விவகாரம்
இந்த பிட்காயின் விவகாரம் இப்போது அரசியல் சூறாவளியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே கூறியதாவது: பிட்காயின் விவகாரத்தை கர்நாடகா பாஜக அரசு எளிமையாக மூடி மறைத்துவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

3-வது முதல்வர் வருவார்
பாஜகவின் மூத்த தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்களின் வாரிசுகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது பல கோடி ரூபாய் மோசடி தொடர்புடையது. பிட்காயினை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிட்காயின் மோசடிகளால் முதல்வர் பசவராஜ் பொம்மை பதவியை இழக்கவும் நேரிடலாம். இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் 3 முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். தற்போதும் அதேபோல பாஜக ஆட்சியில் 3-வது முதல்வர் ஒருவர் வரத்தான் போகிறார்.

விசாரிக்க என்னங்க தயக்கம்?
பிட்காயின் விவகாரத்தை விசாரிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? எதற்காக முதல்வர் பசவராஜ் பொம்மை தாமதம் செய்கிறார்? உள்துறை அமைச்சர் ஏன் விசாரணையை தாமதம் செய்கிறாரா? இவ்வாறு பிரியங்க கார்கே கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, பிட்காயின் மோசடியில் காங்கிரஸ் தலைவர்கள் பெயரும்தான் அடிபடுகிறது. யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என தெரிவித்தால் நாங்களும் விசாரணை நடத்த தயாராகவே இருக்கிறோம் என்றார்.

யாருக்கு எல்லாம் தொடர்புன்னு சொல்லுவோம்
முதல்வர் பசவராஜ் பொம்மையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, பிட்காயின் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பிருக்கிறது எனில் தாராளமாக கைது செய்யலாம்.. அரசாங்கத்தை நீங்கள்தானே நடத்துகிறீர்கள்? உங்களிடம்தானே போலீஸ் இருக்கிறது? நீங்கள்தானே விசாரணை நடத்தும் அதிகாரத்தை வைத்துள்ளீர்கள்? முதல்வர் பசவராஜ் பொம்மையின் விளக்கத்தை பார்த்தால் சந்தேகம் மேலும் மேலும் அதிகரித்தான் செய்கிறேன். பிட்காயின் மோசடி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பதை உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications