பிளான் ட்ராப்.. எங்கேயும் போகவேண்டாம்.. இன்று இரவு முக்கிய மீட்டிங்.. காங்கிரஸ் பரபர திட்டம்!
பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இன்று காலை, வெற்றி முகத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தை தவிர்ப்பதற்காக வெளிமாநிலங்களில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. எனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வெளி மாநிலங்களில் தங்க வைக்கும் பிளானை காங்கிரஸ் மேலிடம் கைவிட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 64 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை கூறியபடியே, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இன்று காலை முதலே பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், பாஜகவைவிட காங்கிரஸ் சற்று அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. ஜேடிஎஸ்ஸும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.
காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ள சூழல் நிலவியதால், கர்நாடகாவில் வெற்றி முகத்தில் உள்ள வேட்பாளர்கள் பெங்களுருக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அவசரமாக உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னைக்கு அல்லது வேறு இடத்திற்கோ எம்.எல்.ஏக்களை அழைத்து தங்க வைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.
கர்நாடகாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த பணிக்காக சிறப்பு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலோர கர்நாடகா காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பெரும்பான்மை கிடைக்காவிட்டால் குதிரை பேரங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையில் இறங்கியது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் தற்போது வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களை பெங்களூரில் உள்ள ஹோட்டலில் இரவில் தங்க வைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சர் யார் என்பது பற்றியும், புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சரவை குறித்தும் இன்று இரவு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications