கர்நாடகா சட்டசபை சபாநாயகராகும் யுடி காதர்! பாஜகவுக்கு ‛டஃப்’ கொடுக்கும் காங்கிரஸ் தலைவர்! யார் இவர்?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை சபாநாயகர் தேர்தலில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்ற எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான யுடி காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜகவுக்கே ‛டப்' கொடுக்கும் யுடிகாதர் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்த்து. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று அசத்தியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் பதவியேற்றனர். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபையின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் உள்ள 224 எம்எல்ஏக்களில் 184 பேர் எம்எல்ஏக்களாக பொறுப்பேற்றனர். சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்எல்ஏவுமான ஆர்வி தேஷ்பாண்டே செயல்பட்டு வருகிறார்.

இவர் ஹலியால் தொகுதியில் இருந்து 9 வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். இந்நிலையில் தான் நிரந்தர சபாநாயகராக அவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. ஆனால் தேஷ்பாண்டே சபாநாயகர் பதவியை விரும்பவில்லை. தனது உடல் நலனை காரணம் காட்டி அவர் விலகினார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மூத்த தலைவர்களான கதக எம்எல்ஏவுமான எச்கே பாட்டீல், ஆலந்தா எம்எல்ஏ பிஆர் பாட்டீல், சிரா எம்எல்ஏ டிபி ஜெயசந்திரா, கொப்பல் மாவட்டம் எலபுர்கா தொகுதி எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி, துமகூரு மாவட்டம் மதுகிரி எம்எல்ஏ ராஜண்ணா, மொலக்கால்மூரு தொகுதி எம்லெ்ஏ கோபாலகிருஷ்ணா உள்ளிட்டவர்களும் சபாநாயகர் பதவியை விரும்பவில்லை. இவர்கள் அனைவரும் அமைச்சர் பதவிக்கு குறிவைத்துள்ளதால் சபாநாயகர் பதவி வேண்டாம் என அடம்பிடித்தனர்.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பெங்களூர் சென்று தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சபாநாயகராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி அவர் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்களுடன் ஆலோசித்தார். இந்த ஆலோசனையில் தான் யுடி காதரை சபாநாயகராக்க முடிவு செய்யப்பட்டது.
கர்நாடகா சட்டசபை சபாநாயகர் பதவிக்கு இன்று மதியத்துடன் வேட்பு மனுத்தாக்கலுக்கான நேரம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் யுடி காதர் இன்று மனுத்தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று யுடி காதர் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை சட்டசபை செயலாளரிடம் தாக்கல் செய்தார். இவர் ஒருமனதாக தேர்வாக வாய்ப்புள்ளது. சபாநாயகர் தேர்தலுக்கான இறுதி முடிவு என்பது அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக தேர்வாக உள்ள யுடி காதர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். இதன்மூலம் கர்நாடகா சபாநாயகராக தேர்வாகும் முதல் இஸ்லாமியர் என்ற பெயரை அவர் பெறுவார். இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் தொகுதியில் 2007, 2008, 2013, 2018, 2013 என 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் இவரது தந்தை யுடி பரித் 4 முறை எம்எல்ஏவாக இருந்தார். கடந்த 2004 தேர்தலிலும் யுடி பரித் மங்களூரில் வெற்றி பெற்று எம்எல்ஏவான நிலையில் காலமானார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசியலில் அறிமுகம் ஆனவர் தான் யடி காதர்.
கர்நாடகாவில் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கடலோர கர்நாடகா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் யுடி காதர்.
இவர் பாஜகவுக்கு ‛டப்' பைட்டராக உள்ளார். ஏனென்றால் கடந்த 2018 தேர்தலில் கடலோர கர்நாடகா மாவட்டங்களில் பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடைந்தனர். இருப்பினும் கூட யுடிகாதர் வெற்றி பெற்று அசத்தினார். கடந்த 2013-2018 காலக்கட்டத்தில் முதல்வராக சித்தராமையா இருந்தபோது யுடி காதர், சுகாதாரத்துறை அமைச்சராகவும், உணவு மற்றும் நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்நிலையில் தான் அவர் கர்நாடகா சபாநாயகராக தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications