மூடா முறைகேடு.. சித்தராமையா மீது கேஸ்! ஆளுநருக்கு எதிராக கர்நாடகாவில் காங்கிரஸ் இன்று போராட்டம்
பெங்களூர்: 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதி கொடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளால் அமைச்சர் நாகேந்திரா பதவி இழந்திருந்தார். இப்போது 'மூடா' முறைகேடு வழக்கு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை குடைய தொடங்கியுள்ளது.

அதாவது மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் மூலம், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சிகள், முறைகேடு காரணமாக சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
'மூடா' குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தது. அதேநேரம் மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்னேகமயி கிருஷ்ணா என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த சூழலை சாதகமாக்கிக்கொண்ட பாஜக, சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது. இதனையடுத்து இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதியளித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ், ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுவதாக விமர்சித்திருக்கிறது. அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா இது குறித்து கூறியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் சதி செய்யப்படுகிறது. ஆளுநர் தனது அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுகிறார். இந்த சதி தொடர்ந்தால் உச்சநீதிமன்றம் சென்று கூட நாங்கள் நீதியை பெற தயங்கமாட்டோம்” என்று கூறியுள்ளார்.
வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் தெரிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, "ஆளுநரின் முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தான் எந்த தவறையும் செய்யவில்லை. ஆளுநரின் செயல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் எந்த தவறையும் செய்யவில்லை.
காங்கிரஸ் போராட்டம்: அனைத்து அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், எம்.எல்.சிக்களும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்க்க சதி நடக்கிறது" என்று விமர்சித்துள்ளார். அதேநேரம், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தும் என்றும் அறிவித்திருக்கிறார்.
போராட்டம் காரணமாக போலீசார் உஷர் படுத்தப்பட்டிருக்கின்றனர். மைசூரை பொறுத்த வரை, அஹிந்தா சமூகத்தினர் சித்தராமையாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். எனவே, ஆளுநருக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூர் தகடூர் கிராமத்தில், ஆளுநரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீ வைத்து எரித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications