"ஜாதி ஓட்டு.." மேகதாது விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக அணி திரளும் கர்நாடக காங்.! பின்னணி இதுதான்!
பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட வேண்டும் என கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 10 நாட்கள் பாதயாத்திரையை தொடங்கியதன் பின்னணியில் கர்நாடகா மக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதையும் தாண்டி ஒரு அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது கர்நாடகா அரசின் நிலைப்பாடாக உள்ளது. அது போல் தமிழகத்தில் மேகதாது அணைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இந்த நிலையில் மேகதாதுவில் அணையை கட்டும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சி 168 கிமீ தொலைவுக்கான 10 நாட்கள் பாத யாத்திரை திட்டத்தை நேற்று தொடங்கினர். கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையை தொடங்கியதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றன.

கர்நாடகம்
இந்த பாதயாத்திரையின் நோக்கம் பெங்களூர் மற்றும் தெற்கு கர்நாடகாவிற்கு குடிநீர் வழங்குவது என்பதாக இருந்தாலும் அதையும் தாண்டி மற்றொரு அரசியல் ஆதாயம் இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் பார்க்கிறார்கள். பொதுவாக எந்த மாநிலங்களாக இருந்தாலும் ஜாதி அரசியலுக்கு ஒரு மவுசு இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

6 கோடி மக்கள் தொகை
அந்த வகையில் கர்நாடகாவில் நிறைய ஜாதி பிரிவுகள் இருந்தாலும் ஒக்கலிக்கா மற்றும் லிங்காயத்து ஆகிய ஜாதி பிரிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர ஒக்கலிக்கா சமூகத்தினர். 17 சதவீதம் பேர் லிங்காயத்து சமூகத்தினர் ஆவார். இதில் ஒக்கலிக்கா சமூகத்தினர் தெற்கு கர்நாடகாவிலும் லிங்காயத்து சமூகத்தினர் வடக்கு கர்நாடகாவிலும் மெஜாரிட்டியாக இருப்பர்.

லிங்காயத்து சமூகம்
கடந்த 2004 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் முதல் பாஜகவுக்கு லிங்காயத்து சமூகத்தினரும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒக்கலிக்கா சமூகத்தினரும் ஆதரவு அளிப்பது பொதுவான டிசைனாகும். இந்த டிசைனானது 2004, 2008, 2018 ஆம் ஆண்டுகளில் மாநில அரசை அமைக்க உதிரி கட்சிகளுடன் இணைத்துக் கொள்வது, குதிரை பேரம் நடத்துவது போன்றவைகளால் பொய்த்து போனது.

நிபந்தனையற்ற ஆதரவு
இதற்கு சிறந்த உதாரணம் கடந்த 2018 சட்டசபை தேர்தலை சொல்லலாம். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், பாஜக 104 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா கட்சி 38 இடங்களிலும் வென்றது. கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க பெரும்பான்மை பலத்திற்கு 113 உறுப்பினர்கள் தேவை. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி சமயோஜிதமாக செயல்பட்டு குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.

பெரும்பான்மை இல்லை
இந்த நிலையில் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்பதால் தங்களுக்கே ஆட்சி அமைக்கும் உரிமை உள்ளதாக கர்நாடகா பாஜக தெரிவித்தது. இதையடுத்து முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல்வராக குமாரசாமி பெரும்பான்மை பலத்துடன் பொறுப்பேற்றார். குமாரசாமி ஆட்சியமைத்த 14 மாதங்களில் 16 காங்கிரஸ் , மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- மஜத கூட்டணி வீழ்ந்தது, குமாரசாமி பதவியை இழந்தார், எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்.

அரசியல் சூழல்
இப்படியான தகிடுதத்தங்கள் நிறைய இந்த அரசியல் சூழலில் இனி வரும் தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவுக்கு ஒக்கலிக்காவின் ஆதரவு தேவைப்படுகிறது. அது போல் மஜதவுக்கும் லிங்காயத்துக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர், தலித்துகள் உள்ளிட்டோருடன் குறைந்தபட்சம் லிங்காயத்து அல்லது ஒக்கலிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கிறது.

மஜத
இதற்காக தெற்கு கர்நாடகாவில் தங்களுக்கான ஒக்கலிக்கா சமூகத்தின் ஆதரவை பெருக்கிக் கொள்ள இந்த பாதயாத்திரை திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தெற்கு கர்நாடகாவில் 61 சட்டசபை தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அது போல் மஜத 29 தொகுதியிலும் பாஜக 11 தொகுதிகளிலும் வென்றது. பெங்களூர் நகர்ப்புற பகுதியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும் மஜத இரு இடங்களிலும் வென்றது.

காங்கிரஸின் ஸ்டன்ட் எடுபடுமா?
தெற்கு கர்நாடகாவில் கால் பதிக்க காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்த பாதயாத்திரை கை கொடுக்குமா என்பதை 2023 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தெரியவரும். இந்த பாதயாத்திரை திட்டத்திற்கு மாஸ்டர் பிளான் போட்டது ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications