முக்கிய விஷயத்தில் கோட்டைவிட்ட அதிகாரிகள்.. கட்டுக்குள் இருந்த பெங்களூரில் மளமளவென அதிகரித்த கொரோனா
பெங்களூர்: கொரோனா வைரஸ் பரவலை கண்டறிவதில் திறம்பட செயல்படுவதாக பாராட்டு பெற்று வந்த கர்நாடக அரசு நிர்வாகம் இப்போது அதில் கோட்டைவிட ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம், தொடர்புகளை கண்டறிதல் என்பதற்கு சில இலக்கணங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதாவது கொரோனா பாதித்த நபர் யாரையாவது கட்டிப் பிடித்து இருந்தால், கைகுலுக்கி இருந்தால், அல்லது 6 அடி இடைவெளிக்கும் குறைவான பகுதியில், 15 நிமிடங்களுக்கு மேல் நின்றிருந்தால், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால், இப்போது, கொரோனா வைரஸ் நோயாளிகளின் குடும்பத்தார் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுதான் வேகமான கொரோனா எண்ணிக்கை உயர்வுக்கு ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் எதிரொலி.. தென் மாவட்டங்களில் குவியும் அதிர வைக்கும் புகார்கள்!!
பரிசோதனை இல்லை
கொரோனா வைரஸ் பாதித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளியின் நண்பர் ஒருவர் கூறுகையில், எனது நண்பர் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் 40 நண்பர்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். ஆனால், யார் ஒருவருடனும் மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை தொடர்புகொள்ளவில்லை. பரிசோதனை நடத்தவில்லை என்று தெரிவிக்கிறார்.
நோயாளிகள் அதிகம்
பெருநகர் பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் அனில் குமாரிடம் இது பற்றி கேட்டபோது, தினமும் 500 முதல் 600 நோயாளிகள் வரை இப்போது பதிவாகும் சூழ்நிலையில், இத்தனை அதிகமான தொடர்புகளுக்கு பரிசோதனை நடத்துவது என்பது இயலாத காரியம். இதுவரை பெங்களூரில் சுமார் 5000 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
சிகிச்சை முதல் பணி
நோயாளிகளை அதற்குரிய மையங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் எங்களது முதல்கட்ட பணியாக இருக்கும். மிகவும் நெருக்கமாக பழகிய தொடர்பு யாராவது இருந்தால் அவர்களையும் சிகிச்சைக்கு உட்படுத்துவது என்பது பிரதான இலக்கு.
பரிசோதனை குறைவு
அதேபோன்றுதான் நோயாளிகளின் உறவினர்கள் அல்லது குடும்பத்தாரை வீட்டு தனிமையிலேயே வைத்திருப்பது மற்றொரு முக்கியமான முடிவு. எனவேதான், பழைய மாதிரி நிறைய பேருக்கு பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியமாக மாறியுள்ளது என்று தெரிவிக்கிறார். மற்றொரு அதிகாரி இதுபற்றி கூறுகையில், தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பணியாளர்கள் நோயாளிகளின் தொடர்புகளை கண்டறிவதில் தினமும் நேரத்தை செலவிடுகிறார்கள் என்று தெரிவித்தார்.