கண்ணுக்கு தெரியாத எதிரி.. கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு!
பெங்களூர்: கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும், அந்த வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரி என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
பெங்களூர் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பெங்களூர் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலை.யில் பிரதமர் மோடி ஆன்லைன் வீடியோ மூலம் உரையாற்றினார்.

கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் வேளையில் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்களை தனது உரையில் குறிப்பிட்டார். அதில், கொரோனா வைரஸ் என்பது நமது கண்ணுக்கு தெரியாத எதிரி. நாம் இதற்கு எதிராக தீவிரமாக சண்டையிட்டு வருகிறோம்.
கொரோனாவுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்கள் உள்ளிட்ட வீரர்கள் வெற்றி பெறுவர்.உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஆயுஷ்மான் பாரத். இதன் மூலம் இந்தியர்கள் பெரிய அளவில் பலன் அடைந்து இருக்கிறார்கள்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.கிராமப்புற பெண்கள்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளனர். கொரோனா போன்ற வைரஸ் பரவி வரும் வேளையில் இது போன்ற திட்டங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸை கர்நாடகா அரசு எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. கொரோனாவை கர்நாடகா மாநில அரசும், மருத்துவர்களும் மிக சிறப்பாக எதிர்கொண்டு இருக்கிறார்கள். நாம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரை விட மிக மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.

கொரோனா வலுவானதாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவர்கள் அதை விட வலுவானவர்கள் . அவர்கள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்கள். கண்ணுக்கு தெரியாத வைரசுக்கு எதிரான வலிமையான மருத்துவர்களின் போராட்டம் இது. நாம் இனி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ துறை, ஆரம்ப சுகாதாரம், மருத்துவ பொருட்கள் உற்பத்தி என்று பல விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவ பணியாளர்களை அதிகரிக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்.மருத்துவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னிலை பணியாளர்களை காக்க வேண்டியது நமது கடமை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications