பேருந்தில் 3 நாட்கள் இலவசமாக செல்லலாம்.. அறிவித்த கர்நாடக அரசு.. ரூ.1 கோடி தந்து உதவிய காங்கிரஸ்!
கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தற்போது 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தற்போது 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் லாக் டவுனில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அங்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடகாவில் மாநிலத்திற்கு உள்ளே இயங்கும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மொத்தம் 600 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரில் இருந்து மக்கள் கர்நாடகாவிற்குள் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு பேருந்தில் 30 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கும் பொருட்டு பேருந்து கட்டணத்தை கர்நாடக மாநில அரசு இரட்டிப்பாக உயர்த்தி உத்தரவு வெளியிட்டது 100% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா போக்குவரத்துத்துறை பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் அங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நேற்று இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மக்கள் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். தினசரி வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்டண உயர்வு கூடாது.

உடனே இந்த க ட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். அதோடு கட்டணம் இல்லாமல் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும். உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் சொல்லுங்கள். நாங்கள் தருகிறோம். மக்களிடம் வசூலிக்க வேண்டாம் என்று மிகவும் கண்டிப்பாக டிகே சிவக்குமார் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவர் சொன்னது போலவே தற்போது கர்நாடக அரசின் கீழ் இயங்கும் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு உதவி செய்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தற்போது 1 கோடி ரூபாய் நிதி உதவியை கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு அளித்துள்ளது.

அரசின் செலவீனத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், மக்களுக்கு உதவும் வகையிலும் இந்த நிதியை அளிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநில அரசு தனது உத்தரவை திரும்ப பெற்றது. அதோடு பெங்களூரில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் பிற மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு கட்டணம் எதுவும் இன்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா முழுக்க இந்த சலுகை நேற்று அமலுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications