விவசாயிகளை ஏமாற்றிட்டாங்க.. சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு தேவைப்படுது! தமிழக அரசு மீது எடப்பாடி அட்டாக்
சென்னை: தமிழகத்தில் முன்பை விட போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், தவெக ஆட்சிக்கு வந்த 38 நாட்களிலேயே 150 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும், சிங்கப்பெண் படையினருக்கே தனி பாதுகாப்பு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தின் 17 வது சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார். சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 38 நாட்களில் 130 கொலைகள் நடந்துள்ளன. தவெகவின் வாக்குறுதி பற்றி எந்த அறிவிப்பும் ஆளுநர் உடையில் இடம்பெறவில்லை. கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாத மின் வெட்டு அதிகரித்துள்ளது. அடிக்கடி இரவில் மின் தடை ஏற்படுகிறது.
இதனால், மக்கள் இரவில் தூங்க முடியாமல் இரவில் போராட்டம் நடைபெற்றதை பார்த்தோம். தூக்கத்தை தொலைத்த அரசாங்கம் தவெக அரசுதான். பியூஸ் கேரியர் திருட்டு போனதால்தான் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாக கூறினார்கள். இதற்கு முன்னால் திமுக ஆட்சியில் அணில்கள் ஓடியதால்தான் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறினார்கள். இப்போது புதிய கண்டுபிடிப்பாக பியூஸ் கேரியர் திருட்டுபோனதால் மின் தடை ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதுமா? மின் தடை ஏற்படுகிறது. நிர்வாக கோளாறு காரணமாக மின் தடை ஏற்படுகிறது. தேவையான மின்சாரம் கொள்முதல் செய்து மின் தடை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். காவிரி நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய முயற்சி எடுத்து இருந்தால் மேட்டூர் அணையை திறந்து இருக்கலாம். திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் என்ன தகவல் இருந்ததோ அந்த தகவல்தான் வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் 72 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும், மின்சார துறையில் 2.40 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், குடிநீர் வழங்கல் துறையில் இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் தெரிந்து தானே விஜய், வாக்குறுதி கொடுத்தார். இதை எல்லாம் சரி செய்த பிறகுதான் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்றால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்பதுதான் இதன் பொருள். அதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள் என்று நினைக்கிறேன். சிங்கப்பெண் படைக்கே சிறப்பு பாதுகாவலர்கள் வேண்டும். அந்த அளவுக்கு தான் சட்டம் ஒழுங்கு இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.














Click it and Unblock the Notifications