"பணத்திற்காக எதையும் செய்வார்.." தர்மஸ்தலா விவகாரம்! பொய் தகவலை சொன்ன சின்னையாவின் மாஜி மனைவி பகீர்
பெங்களூர்: கர்நாடகாவில் தர்மஸ்தலா விவகாரத்தில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே பொய்யான தகவலைச் சொன்னதாக சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் எப்போதுமே பொய்களையே சொல்வார் என்றும் பணம் பறிக்க இதுபோல சொல்லி இருக்கலாம் என்றும் சின்னையாவின் மாஜி மனைவி தெரிவித்துள்ளார். மேலும், அவர் பணத்திற்காக எதையும் செய்வார் என ஊர் மக்களுக்கும் கூறியுள்ளனர்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தர்மஸ்தலா விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோயிலில் வேலை செய்த துப்புரவு ஊழியர் ஒருவர் தர்மஸ்தலாவில் பல பெண்களை, மாணவிகளைப் புதைத்துள்ளதாகக் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அங்குச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், விசாரணையில் அதுபோல எந்தவொரு சடலங்களும் கண்டறியப்படவில்லை.

தர்மஸ்தலா
மண்டியா மாவட்டம் சிக்கபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சி.என். சின்னையா என்பர் தான் போலீசாருக்கு இந்தத் தகவல்களைக் கொடுத்திருந்தார். தர்மஸ்தலாவில் பெருமளவில் உடல்கள் புதைக்கப்பட்டதாகச் சொல்லி வாக்குமூலம் கொடுத்ததும் இவர் தான். இருப்பினும், இவர் சொன்ன தகவல்கள் எல்லாம் பொய் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சின்னையாவின் முன்னாள் மனைவி ரத்னம்மா இப்போது கூறியுள்ள சில கருத்துகள் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அதாவது சின்னையா எப்போதும் பொய்களைப் பேசுபவர் என்றும், பணம் சம்பாதிக்கும் நோக்கில் சடலங்கள் புதைத்த கதையைச் சொல்லி இருக்கலாம் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பொய் சொல்வார்
நாகமங்கலாவில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரியும் ரத்னம்மா, 1999ல் சின்னையாவை மணந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்தத் தம்பதியினர் 2006ல் விவாகரத்து பெற்றனர். பீமா என்று அழைக்கப்படும் சின்னையா, திருமண வாழ்க்கையில் இருந்தபோது தன்னைத் தாக்கியதாகவும் ரத்னம்மா கூறினார். விவாகரத்து நடவடிக்கைகளின் போது கூட, ஜீவனாம்சம் செலுத்துவதைத் தவிர்க்க, தான் வேலை இல்லாமல் இருப்பதாக நீதிமன்றத்தில் பொய் சொன்னதாகவும் ரத்னம்மா குற்றம் சாட்டினார்.
நீதி கிடைக்கவில்லை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனக்கு ஒருபோதும் நீதி கிடைக்கவில்லை. என் அம்மாதான் என்னை வளர்த்தார். கடைசி வரை அவர் தான் பார்த்துக் கொண்டார். இப்போது என் குழந்தைகள் தான் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள்" என்றார். மேலும், சின்னையா உடன் இருந்த போது அவர், பாலியல் வன்கொடுமை அல்லது கொலைச் சம்பவங்கள் பற்றியோ, சடலங்கள் புதைக்கப்பட்டது பற்றியோ ஒருபோதும் பேசியதில்லை என்றும் ரத்னம்மா கூறினார். சின்னையா வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயன்றிருக்கலாம் என்றும் ரத்னம்மா தெரிவித்தார்.
யார் இவர்
அதேபோல சின்னையா குறித்து அவரது பள்ளிக்கால நண்பர் சிக்கபள்ளி பாலு கூறுகையில், "சின்னையா முதலில் அவரது தந்தையுடன் தான் வசித்து வந்தார். ஆனால், அவரது தந்தை இறந்த பிறகு, தர்மஸ்தலாவில் வசித்து வந்த அவரது அண்ணன், இவரையும் கூட்டிச் சென்றுவிட்டார். 1994 முதல் அவர் அங்கு தான் இருக்கிறார். அவர் அங்குத் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்" என்றார்.
அப்போது 2014ல் சின்னையா ஒரு பெண்ணுடன் சிக்கபள்ளிக்குத் திரும்பியதாகவும் அந்தப் பெண் தனது மனைவி என்று சின்னையா கூறியதாகவும் பாலு கூறுகிறார். தர்மஸ்தலாவில் வசித்தபோது சின்னையா மூன்று முறை திருமணம் செய்ததாகவும், ஆனால் அனைத்துத் திருமணங்கள் பிரிவிலேயே முழந்தாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பணத்திற்காக எதையும் செய்வார்
அதேநேரம் தர்மஸ்தலாவில் தொடர்ந்து வேலை செய்து வந்த சின்னையா, தனது சொந்தக் கிராமத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தர்மஸ்தலா கோவிலில் தரிசனம்' ஏற்பாடு செய்ய சின்னையா உதவியுள்ளார். ஆனாலும் கூட சின்னையா பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் தயங்காதவர் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டினர். அவர்கள் மேலும் கூறுகையில், "அவர் எப்படிப்பட்டவர் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதன் காரணமாகவே சடலங்களைப் புதைத்ததாக அவர் சொன்ன போது அவை பொய் என்றே நினைத்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications