விபரீதத்தில் முடிந்த பள்ளித் தோழிகளின் கோவா சுற்றுலா .. 11 பேர் பலி.. வைரலாகும் கடைசி செல்பி
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பள்ளித் தோழிகள் 15 பேர் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது, ஹூப்ளி அருகே அவர்கள் சென்ற சுற்றுலா வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து டிப்பர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் பள்ளித்தோழிகள் 10 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
கர்நாடக மாநிலம் தவனகரே பகுதியைச் சேர்ந்த பள்ளித்தோழிகள் ஆஷா, மீராபாய், பரஞ்ஜோதி, ராஜேஸ்வரி, சகுந்தலா, உஷா, வேதா, வீணா, மஞ்சுளா, நிர்மலா, ரஜனீஷ், சுவாதி உள்பட 16 பேர் ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமையாக எங்காவது சென்று சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை கோவாவில் கொண்டாட முடிவு செய்திருந்திருக்கிறார்கள்.
.இவர்கள் அனைவருக்கும் 35 வயது இருக்கும். இவர்கள் வேன் ஒன்றில் கோவா நோக்கிச் சென்றுள்ளனர்.. சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்ஃபியை எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளனர்.. பள்ளித் தோழிகளுடன் கோவா செல்கிறோம் என்று அதில் பதிவிட்டிருந்தனர்.

பயங்கர விபத்து
இந்த செல்ஃபி போட்டு சில மணி நேரத்தில் பயங்கர விபத்து நிகழ்ந்து நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி - தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் லிட்டிகட்டி என்ற இடத்தின் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது. எதிர்சாலையில் எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி கட்டுபபாட்டை இழந்து சாலை தடுப்புகளை தாண்டி வந்து பயங்கரமாக வேன் மீது மோதியது.

பள்ளித்தோழிகள்
இதில் வேன் அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்தது. இதேபோல் டிப்பர் லாரியும் நொறுங்கியது. சுற்றுலா வேனின் டிரைவர் பிரவீன் மற்றும் வேனில் இருந்த ஆஷா, மீராபாய், பரஞ்ஜோதி, ராஜேஸ்வரி, சகுந்தலா, உஷா, வேதா, வீணா, மஞ்சுளா, நிர்மலா, ரஜனீஷ், சுவாதி உள்பட 11 பேர் பலியாகினர். ஐந்து பெண்கள் மற்றும் டிப்பர் டிரக்கின் டிரைவர் பலத்த காயம் அடைந்து தற்போது ஹூப்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மோடி இரங்கல்
உயிரிழந்தவர்களில் தவனகரே ஜகலூரைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மருமகள், பிரீத்தி ரவிக்குமாரும் ஒருவர் ஆவார் முன்னாள் எம்.எல்.ஏ குரு சித்தனகவுடாவின் மருமகள் ஆவார். இவர் உள்பட 4 பேர் மருத்துவர்கள் ஆவர். பள்ளித்தோழிகள் 11 பேரின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட் பதிவில், கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் சாலை விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தமடைந்துள்ளேன் இந்த சோகமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளித் தோழிகள் செல்பி
இந்தசம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, எதிரே பள்ளித் தோழிகளுடன் வந்து கொண்டிருந்த டெம்போ வேனுடன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த 8 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மற்ற மூன்று பேரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. பள்ளித்தோழிகள் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தது அவர்களின் குடும்பததினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தோழிகள் எடுத்த கடைசி செல்ஃபி, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications